சாவித்ரி 0 187
'அம்மா!'
முகத்தில் கேள்வியோடு அம்மா தலை நிமிர்ந்தாள்.
'அம்மா! இதோ பார், நாங்கள் சிறிசுகள். எங்களை நீ விட்டுத்தான் பிடிக்கவேண்டும். நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ எங்கள் நடத்தை உனக்கு ஒரு சமயம் பிடித்திருக்கலாம். ஒரு சமயம் பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் எங்களை நீ விட்டுத்தான் பிடிக்கவேண்டும். உன் வயசில் நீயும் எங்கள் வயசில் நாங்களும்- இரண்டும். ஒன்றாய்ப் போய்விடுமா? நீ சிலவற்றைக் காதில் போட்டுக் கொள்ளாமலும் கண்ணில் கண்டுகொள்ளாமலும் இருந்தால்தான் நல்லது. என்னவோ நான் சொல்கிறதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்.
கூடைமண்ணைச் சாய்ப்பது போல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு விர்'ரென்று சிலராஜன் மாடிக்குப் போய் விட்டான். சாவித்திரி கல்லால் அடித்தாற்போல் நின்றாள். திகைப்பு அவளைத் திணற அடித்தது.
முற்றத்தில் மரத்தொட்டியின் விளிம்பில் ஒரு சிட்டுக் குருவி உட்காந்து வெகு உற்சாகமாக அரட்டையடித்துக் கொண்டிருந்தது. உறங்கிக் கொண்டிருந்த பூனை சரேல்' எனப் பாய்ந்தது. அது படுத்திருந்ததற்கும் பாய்ந்ததற்கு மிடையில் இடைவேளை இருந்ததாகவே தெரியவில்லை. அதன் மின்வெட்டில் பூமியில் பாதங்கள் படாமல் அது பறந்த மாதிரியே இருந்தது.
கிறிச்!--
தொட்டி விளிம்பிலிருந்து எழும்பிய வேகத்தில் குருவி யின் சிறகுகள் பூனையின் முகத்திலேயே மோதின. அந்த அதிர்ச்சியில் பூனைக்குக் கழுத்து உள்வாங்கிற்று. குருவி வெந்நீர் அறையின் சுவர்க் கட்டைமேல் உட்கார்ந்து கொண்டு வளவள வெனப் பூனையைத் திட்டிற்று. அசடும் திகைப்பும் முகத்தில் வழியும் பூனை தன் வேகமும் பொலிவும் இழந்து நின்றது.