88 புலவர் கா. கோவிந்தன் நிகழ்ச்சிகளின் தொடக்க நிகழ்ச்சிகளாக மேற்கொள்ளப் பெறுவனவே என்பதை ஏற்றுக் கொள்வதாயினும், அந்நிகழ்ச்சிகள் அவ்வரசர் பின்னர் மேற்கொள்ளப் போகும் ஏனைய போர்களோடு தொடர்புடையன ஆகா. வெட்சிப் போரிலும், கரந்தைப் போரிலும் தொழிலாற்றும் படைகள், இரு திறத்தாரின் எல்லைக் கண் நிற்கும் சிறுபடைகளே; அவ்வரசர்களின் பெரும் படைகள் அவற்றில் ஈடுபடுவதில்லை. மேலும், பின்னர்ப் பெரும் போர் செய்ய இருக்கும் அரசர், அதற்கு அறிகுறியாக மேற்கொள்ளப்படுவனவே வெட்சியும், கரந்தையும் எனக் கருதப்படுவது உண்டு என்றாலும், அம்முறையினை அரசர் அனைவருமே பின்பற்றி வந்துள்ளனர் எனக் கூறுவதற்கில்லை. பேரரசர் களும், குறுநில மன்னர்களுமாய்ப் பழந்தமிழ் நாட்டினைப் பண்டு ஆண்டிருந்தாருள், போர் மேற்கொள்வதன் முன்னர், இம்முறையினைப் பின் பற்றினார் ஒருவரும் இலர். அவ்வாறு மேற்கொண்டனர் என்பதை உறுதி செய்ய வல்ல சான்று எதுவும் பழந்தமிழ் நூல்களுள் காணப் பெறவில்லை. "சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி, கெடலரும் துப்பின் விடுதொழில் முடிமார், கனையெரி நடந்த கல்காய் கானத்து வினைவல் அம்பின் விழுத்தொடை மறவர் தேம்பிழி நறுங்கள் மகிழின் முனைகடந்து வீங்குமென் சுரைய ஏற்றினம் தரூஉம்.” -'அகம் 105 "மாயிரும் முள்ளூர் மன்னன் மாவூர்ந்து எல்லித் தரீஇய இனநிரைப் - பல்ஆன் கிழவரின் அழிந்த." -நற். 291.