268
பதிற்றுப்பத்து தெளிவுரை
முன்பு, பல பகையரசரோடும் செய்த போர்களிலே. அவர்தம் படைமறவர் கூட்டம் அழிந்தொழியவும், அவ்வரசர்களும் அக்களங்களில்தானே செத்தொழியவும் கொன்று, அவ்வெற்றியின் களிப்பினாலே தோள்களை உயர்த்து வீசியாடுகின்ற துணங்கைக் கூத்தினை ஆடியவர் அவன் படை மறவர்கள். அப் பிணக்குவியல்களின் மேலாக உருண்டு சென்றும் தேய்ந்து போகாத சக்கரங்களை யுடைய, பண்ணுதலமைந்த தேர்களும், குதிரைகளும், காலாட்களும் இவ்வளவென எண்ணிக் காண்பதற்கான அருமையினை உடையவை. ஆதலின், யானும் அவற்றை எண்ணுதலில் ஈடுபட்டிலேன்.
கட்டுத் தறியின்கண்ணே கட்டுப்பட்டு அடங்கி நில்லாதனவும், குத்துக்கோல்கள் பலவற்றையும் அழித்தனவும். உயரத்தே வானிற் பறந்து செல்லும் பருந்துகளின் நிழல் நிலத்திலே விழக் காணின் அதனையும் தாக்குவதுமான, பரற் கற்களையுடைய உயர்ந்த வன்னிலத்திலே வாழும், நிலத்தைத் தோண்டும் படையினைக் கைக்கொண்டு செல்லும் கொங்கர்களது பசுக்கள் பரந்து செல்வதைப் போன்று பரந்து செல்லும் செலவினைக் கொண்டதுமான, பல போர் யானைகளை மட்டும் அவனது தானையிடத்தே யான் கண்டுள்ளேன்.
சொற்பொருளும் விளக்கமும்: சினப்போர் - சினத்தோடு செய்யும் போர்த்தொழிலையுடைய. பொறையன் - சேரன். ஆறு - வழி. வம்பலிர் - புதியரே. மன்பதை - காலாட்படை யினர். பெயர் - அழிய; இவ்வுலகைவிட்டு மேலுலகம் போய்ச் சேர. ஒழிய - செத்து அழிய. துணங்கை - கூத்து: தோள் ஓச்சியாடும் ஒருவகைக் களிக்கூத்து. மீபிணத்து - பிணத்து மேல். உருண்ட - உருண்டு சென்ற. ஆழி - சக்கரம். பண் அமை - பண்ணுதல் அமைந்த; பண்ணுதல் - அலங்கரித்தல். மா - குதிரை. மாக்கள் - காலாட்படையினர். கோள் ஈயாது - கட்டுப்பட்டு நில்லாது. கந்து - கட்டுத்தறி. காழ் - குத்துக் கோல். முருக்கி - பறித்து அழித்து. உகக்கும் - உயர்ந்து பறக்கும். சாடல் - மோதுதல். சேண் - உயர்ந்த. பரல்- பருக்கைக் கற்கள். முரம்பு - வலிய மேட்டு நிலம். ஈர்ம் படை - நிலத்தைத் தோண்டுதற்கான குந்தாலி போன்ற படை. கொங்கர் அளவற்ற பசுக்களை உடையோராயிருந்தனர்; இதுபற்றிச் சேரனின் யானைப்படையின் அளவைப் பரந்து செல்லும் அப்பசுக்களின் மிகுதியோடு ஒப்பிட்டுக் கூறினர். இதனாற் பெருஞ்சேரலது பெரும்படையினைப் பற்றியும் உரைத்தனர்.