பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

பதிற்றுப்பத்து தெளிவுரை


நகரம் நீவிய நுவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையும் கற்பின்
வாணுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே. 20

தெளிவுரை : பலவான வேற்படை மறவர்களையுடைய இரும்பொறையே; நின் ஆட்சிமுறைதான் மிகச்செவ்விது. அதனாலே, மழையும் காலத்தோடு தவறாமற் பெய்கின்றது. காட்டிடத்தே. கூட்டங்கொண்ட இளமான்கள் தத்தம் ஏறுகளோடும் கூடியவையாய்த் திரிகின்றன. பறவையினங் களும் வண்டினங்களும் பெரிய மரக்கிளைகளிலே அமர்ந்து ஆரவாரிக்கின்றன. பழங்களும் கிழங்குவகைகளும் மக்களும் பிறவும் உண்ணுதலால் ஒழிதலை அறியாவாய் மிகுந்திருக்கின்றன. பலவகைப்பட்ட பசுக்களைக் கொண்ட நல்ல மாட்டு மந்தைகள் புல்லை மேய்ந்துவிட்டுத் துள்ளி மகிழுகின்றன. விளைபயன் அறுதலை அறியாதபடி வளம்பொருந்திய பலவகைத் தானியங்களும் எங்கணும் நெருங்கிக் கிடக்கின்றன. இவை எல்லாம் நல்லபல ஊழிகளாக நடுவுநிலையோடு நிலையாக நிகழ்ந்து வருகின்றன. நாள்தோறும் பல நாட்டு மக்களும் தொழுது போற்றுகின்றனர். உயர்நிலை உலகத்தே உயர்வு பெற்றோராகிய தேவர்களும் நின்னைப் போற்றுகின்றனர்.

ஆட்சியை நடத்துதலிலே பிழைத்தலின்றியும், போர்க் களங்களிலே பகைவரை வெல்லும் வெற்றியால் மேம்பட்டுத் தோன்றியும், நீதான் எவ்வகைத் துன்பமுமின்றி விளங்குவாயாக!

நின்னிடத்தே அன்பு பூண்டு அடங்கிய நெஞ்சம் எந்நேரமும் குற்றப்படுதலை அறியாதவள்; கனவினும் நின்னைப் பிரியாதே உறையும் வாழ்க்கையினள்; குளிர்ச்சியாகத் தகரச்சாந்து தடவிய ஈரம் புலராத கூந்தலையுடையவரான மணமகளிரால் பார்க்கப்படுவதும், பின்னரும் தம் வாழ் நாளின் அளவை அறிவதற்குப் பார்க்கப்படுவதுமாகிய, விளங்கும் ஒளியுடைய அருந்ததி என்னும் விண்மீனோடு ஒப்பாகும் கற்பினை உடையவள்; ஒளிபொருந்திய நெற்றியை உடையவள்; நின் தேவி யாவாள்!

அவளோடும் அழகு பொருந்தக் கூடிவாழ்பவனாக, நீயும் நெடுநாள் நோயின்றி வாழ்வாயாக!