பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பர்மாவில் பெரியார்

"பணம் வேண்டுமென்றால் தனியாக நிதி வசூலித்துத் தருகிறேன். கூட்டத்திற்குக் கட்டணம் வைக்கத் தேவையில்லை" என்று நான் மறுத்து விட்டேன்.

மேலும் என்னை வற்புறுத்தவில்லை பெரியார்.

கால்சா மண்டபத்தில் கூட்டம் தொடங்கியது.

தோழர் சேரன் தலைமையில் பெரியார் சிறப்புச் சொற்பொழிவு செய்வதாக விளம்பரம் செய்திருந்தோம்.

தோழர் சேரன் தலைமையுரை தொடங்கினார். மண்டபத்தின் வாசல்பக்கம் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.

நான் . மேடையில் பெரியாருக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். மேடைக்கு வந்த ஒரு தோழர் என்னைத் தனியாக அழைத்தார்.

"எந்த நேரமும் கலகம் உருவாகலாம், மண்டபத்தின் வாசலில் ஒரே ரகளையாக இருக்கிறது." என்றார்.

"என்ன காரணம்?" என்றேன்.

"உள்ளே நுழைய முயற்சி! உள்ளே கூட்டம் நிறைந்து விட்டது. வெளியில் நிற்பவர்கள் அனைவரும் உள்ளே வரமுயல்கிறார்கள்."

"இவ்வளவு தானா? நான் ஏதோ மாற்றுக் கட்சிக்காரர்களின் கலக முயற்சியோ என்று பயந்துவிட்டேன். உடனே போலிஸ் உதவி கேட்டுப் போன் செய்யலாமா?" என்று கேட்டேன் நான்.

"அவர்கள் வரும் வரை தாங்காது. கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது" என்றார் நண்பர்.

"வெளியில் எத்தனை பேர் இருப்பார்கள்?"