42
பர்மாவில் பெரியார்
இத்தகு சிறப்பு வாய்ந்த மோல்மேன் நகரில் என் தந்தையார் தொழில் நடத்திவந்ததால், நான் அங்கு சில நாட்கள் தங்கியிருந்ததுண்டு. அடிக்கடி போய் வந்ததும் உண்டு.
அங்கு எனக்குப் பழக்கமான நண்பர் ஒருவர் ஒருநாள் என்னைத் தேடி வந்தார்.
பர்மாவுக்குப் பெரியார் வந்திருப்பதறிந்த மோல்மேன் நகர இந்திய மக்கள், பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்க விரும்புவதாகவும். அவரை அழைத்துப் போகவே தான் வந்திருப்பதாகவும் கூறினார்.
எனக்குப் பழக்கமானவர் என்பதாலும் நகரத்தார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரை நான் நம்பினேன்.
மேலும், மோல்மேன் வாழ் இந்தியப் பெருமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரவேற்புக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறிய போது எனக்குப் பெருமையாக இருந்தது.
இரங்கூனில் இருந்த அத்தனை இந்திய இனத்தவர்களும் என் வீட்டைத் தேடி வந்து பெரியாரைப் பெருமைப் படுத்தியதைக் கண்ணாரக் கண்டவன் நான்.
மோல்மேனில் உள்ள அனைத்து இந்திய இனத்தவர்களும். என் அன்புப் பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்கப்போகும் அந்த மகத்தான காட்சியை எண்ணிப் பார்த்து நான் பெரு மகிழ்ச்சி கொண்டேன்.
அந்த நண்பரை அழைத்துக் கொண்டு பெரியாரிடம் சென்றேன்.