பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆருகத மதத்தை ‘இந்து’ மதத்தில் சேர்க்க முயன்றது

203



சிவனடியான்

இவன், “சிவனை முழுதும் மறவாத சிந்தையன்” என்று கலம்பகம் போற்றுகின்றது. சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையுள் இவனை ஒரு நாயனாராகப் பாடிப் புகழ்ந்து. “கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று கூறியுள்ளார். மேற்சொன்ன இவனுடைய திருப்பணிகளும் இவன் சிவபக்தன் என்பதை மெய்ப்பிக்கின்றன. இவற்றை அரண் செய்வது போல வேலூர் பாளையப் பட்டய வரிகள் காண்கின்றன: அவை, சிவனது திரு அடையாளம் நெற்றியிற் கொண்ட (திருநீறு அணிந்த) நந்திவர்மன் கைகளைக் குவித்து, ‘எனக்குப் பின்வரும் அரசர் இந்தத் திருப்பணியைப் பாதுகாப்பராக’ என்று வேண்டுகின்றான் என்பன.

இவன் காலத்து அரசர் (கி.பி. 825-850)

இக்காலத்துக் கங்க அரசன் முதலாம் பிருதிவீபதி (கி.பி.853 - 880) என்பவன்: இராட்டிரகூட அரசன் அமோகவர்ஷ நிருபதுங்கள் (கி.பி.814 - 880): பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 830-862) என்பவன் ஆவன்.


17. பிற்பட்ட பல்லவர்
(கி.பி. 850 – 882)

நிருபதுங்கவர்மன்

நிருபதுங்கவர்மன் மூன்றாம் நந்திவர்மனுக்கு மகன். இவன் இரட்டிரகூட அமோகவர்ஷ நிருபதுங்கன் மகளான சங்கா என்பவளுக்கும் மூன்றாம் நந்திவர்மனுக்கு பிறந்தவன் ஆதலின். பாட்டன் பெயரைப் பெற்றவன். இவன் சற்றேறக்குறையக் கி.பி. 850 இல் பட்டம் பெற்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆண்டான்.