6
பல்லவர் வரலாறு
இவர் கூறிய மூன்று காலங்களில் முதல் இரண்டு காலங்களும் பொருத்தமானவையே ஆகும். ஆயின், மூன்றாம் காலம் கி.பி. 163-300[1] வரை அஃதாவது, குப்தர் பேரரசு ஏற்படும் வரை எனக் கொள்ளலே முறை. என்ன? கி.பி. 163இல் இறந்த (கவுதமிபுத்திர சதகர்ணியின் மகனான) புலுமாயிகுப் பின்வந்த ஆந்திர அரசர் வலியற்றவர்[2] எனப்படுதலின் என்க. எனவே,தமிழரசர் வடஇந்தியாமீது படையெடுக்க வசதியாக இருந்த மூன்று காலங்களாவன:- (1)கி.மு. 232-கி.மு.184, (2) கி.மு.148-கி.மு.27. (3) கி.பி.163-300. இனி இவற்றுள் செங்குட்டுவன் காலம் யாதென ஆராய்வோம்.
செங்குட்டுவன் பத்தினிக்கு விழா எடுத்தபோது வந்திருந்த அரசருள் ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு ஒருவன்’ எனச்சிலப்பதிகாரம் செப்புகிறது. இலங்கையில் இருந்த பத்தினிச் சிலை ஒன்று இப்போது பிரிட்டிஷ் காட்சிச் சாலையில் இருப்பதைக் கொண்டும், சிலப்பதிகாரக் கூற்றைக் கொண்டும் - கயவாகு இலங்கையில் பத்தினிக்கொரு கோயில் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. இக்கயவாகுவின் காலம் கி.பி.171-193 என இலங்கைப் பட்டயம் இயம்புகின்றது.[3] (இரண்டாம் கயவாகுவின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பதை ஈண்டு நினைவு கொள்ளல் நலமாகும்). இதுவே செங்குட்டுவன் வாழ்ந்த காலமாகும். இக்காலம் மேற்கூறிய மூன்று காலங்களில் இறுதிக் காலத்துடன் ஒன்றுபடுகிறது. இக்காலத்தே, கி.பி.166-196 வரை தமிழகத்துக்கு வடக்கே கங்கையாறு வரை சிறப்புற்றிருந்த ஆந்திர சதகர்ணி அரசன் யக்ஞஸ்ரீ[4] என்பவன். இச் ‘சதகர்ணி’ என்பதன் மொழிபெயர்ப்பே ‘நூற்றுவர் கன்னர்’ எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது. இந்நூற்றுவர் கன்னர் செங்குட்டுவனுக்கு நண்பர்;