பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

11


தலைநகராகிய பூம்புகாரில் தொடங்கிப் பாண்டியர் கோநகராகிய மதுரையில் திருப்பம் பெற்றுச் சேரர் கோநகராகிய வஞ்சியில் முடிவு பெறுவதனால் சிலம்பிலேயே மூன்று நகரங்கள் பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன.

ஆனால், காவிரிப்பூம்பட்டினம் பற்றியும், கூடல் மாநகர் என்று சிறப்பித்துக் கூறப்படும் மதுரை நகரம் பற்றியுமே சிலம்பில் மிகுதியான தகவல்களை அறிய முடிகிறது. வஞ்சி பற்றிக் குறைவாகவே அறிய முடிகிறது.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடலில் மதுரை நகரமைப்புக்கு வரைபடம் (Blue Print) போலவே ஒரு பாட்டு வருகிறது. அப்பாட்டு மதுரை நகரமைப்பைத் தாமரைப் பூவுடன் ஒப்பிட்டு அழகுற விளக்கி விவரிக்கிறது.

தண்டியலங்காரத்துள் வரும் தனிமேற்கோள் செய்யுள் காஞ்சி நகரின் அமைப்புத் தோகை விரித்தாடும் மயில் போல் அழகியது 5 எனக் கூறுகிறது. பல நூல்களும் காப்பியங்களும் பொதுவிற் கூறும் சிறப்பான முறை ஒன்றும் காணப்படுகிறது. தத்தம் கோநகரங்களை வருணிக்குங்கால் அது நிலமகள் நெற்றியில் திலகம்போல் அமைந்துள்ளதாய்க் கூறுகிற வழக்கை நிறையக் கான முடிகிறது. சில நகரங்களின் அமைப்பு, தோற்றம், வரலாறு ஆகியவற்றுடன் புராணக் கதைகள் தொடர்பு பட்டு வருகின்றன. ஆராய்ச்சிக்கு அவற்றிலிருந்து பயன் தரும் சில குறிப்புக்கள் கிடைக்கக் கூடும்.

மாபெரும் பூம்புகார் தவிர உறையூரும் சோழர் கோநகரமாயிருந்துள்ளது எனினும் உறையூரின் சார்பு - சுற்றுச்சூழல் பற்றி அறிய முடிந்த அளவு நகரின் அமைப்புப் பற்றிய உள் விவரங்களை நிரம்ப அறியச் சான்றுகள் குறைவாகவே உள்ளன.