பக்கம்:பழைய கணக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

“நான் விலகவில்லை. நீங்கள்தான் அனுப்பி விட்டீர்கள். ஒரு நாள் நான் ஆபீஸில் தூங்கிக் கொண்டிருந்ததைத் தாங்கள் பார்த்து விட்டு என் கணக்கை அன்றே தீர்த்து அனுப்பி விட்டீர்கள்!” என்றேன்.

“அடேடே! அப்படியா?” என்று வாய் விட்டுச் சிரித்து விட்டார் வாசன்.

அடுத்த சில நிமிடங்களில் நான் மீண்டும் விகடனில் வேலைக்குச் சேருவது என்று முடிவாயிற்று.

இதில் வேடிக்கை என்னவென்றல் நான் கல்கியில் இரண்டாம் முறை வேலைக்குச் சேர்ந்து அப்போது பதினெரு மாதங்களே ஆகியிருந்தன. கல்கி பத்திரிகையின் அதிபர் திரு சதாசிவம் என்னிடம் மிகுந்த அன்பும் ஆதரவும் காட்டி மற்ற ஸீனியர் ஆசிரியர்களுக்குச் சமமான அந்தஸ்தும் கொடுத்து வைத்திருந்தார். எனவே, கல்கியிலிருந்து ராஜினாமாச் செய்து விட்டு விகடனுக்குப் போவதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. இதனால் எனக்கு உணர்ச்சி பூர்வமான சங்கடம் நிறைய இருந்தது. ஆனாலும் விகடனில் சேரும் ஆசையில் ராஜினாமாச் செய்து விட்டேன். பதினைந்து நாட்களாகியும் என் ராஜினாமா விஷயம் கிணற்றில் போட்ட கல் மாதிரி இருந்ததால் கடைசியில் திரு சதாசிவம் அவர்களேயே நேரில் சந்தித்துப் பேசி விடுவது என்ற முடிவுடன் அவரது அறைக்குள் போனேன்.

என்னைக் கண்டதும் அவர், “என்ன, வேலையை விட்டுப் போகப் போகிறீர்களாமே! என்ன விஷயம்?” என்று இழுத்தார்.

கொஞ்ச நேரம் மெளனம்.

“சரி, உங்கள் இஷ்டம், நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை. உங்களுக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு மாதச் சம்பளம் கொடுத்தனுப்பச் சொல்லியிருக்கிறேன்” என்று கூறி வாழ்த்தி அனுப்பினர்.

திரு சதாசிவம் அவர்களின் தாராள மனதை ஏற்கனவே அறிந்தவன் நான். அவருடைய விருந்தோம்பும் குணம், நகைச் சுவை உணர்வு, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றல், எழுதும் புலமை, திட்டமிட்டுச் செயலாற்றும் திறன், எடுத்த காரியத்தில் வெற்றி காணும் பிடிவாதம், பணத்துக்கு அதிக மதிப்புத் தராத இயல்பு, இவ்வளவும் ஒருங்கே அமைந்த அவரிடம் வேலை செய்வதைப் பெருமையாக எண்ணியவன். இப்போது அவரிடம் போய் வேலையை விட்டுப் போகிறேன் என்றதும், என்னிடம் துளியும் முகம் சுளிக்காமல் மகிழ்ச்சியோடு விடை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/38&oldid=1145712" இலிருந்து மீள்விக்கப்பட்டது