பக்கம்:பழைய கணக்கு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



போகிற இடமெல்லாம் ஒரு போட்டி

ரண்டாம் முறையாக நான் 1955-ல் கல்கியில் சேர்ந்த போது வாரா வாரம் உதவி ஆசிரியர்கள் எல்லோரும் கூடிப் புதிய அம்சங்கள் பற்றிச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவது வழக்கம். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதுமே உண்டு. பெரிய அளவில் சிறுகதைப் போட்டி ஒன்று அறிவித்து நிறைய ரொக்கப் பரிசு தரலாம் என்ற பொதுவான யோசனையை கல்கி அலுவலகத்தினர் வெளியிட்டார்கள். இதில் புதுமை எதுவும் கிடையாது. எல்லாப் பத்திரிகைகளுமே செய்யக் கூடியதுதான். எனக்கென்னவோ அப்படிச் செய்வதைவிடப் பரிசுத் தொகையைக் குறைத்து மாதா மாதம் சிறுகதைப் போட்டி நடத்தினால் அதன் மூலம் வளரும் எழுத்தாளர்களும் புதியவர்களும் நிறைய அளவில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று தோன்றியது. பரிசுத் தொகை அதிகம் என்பதாலேயே சிறப்பாகக் கதை எழுத வந்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த என் கருத்தை மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள். எனவே மாதச் சிறுகதைப் போட்டி ஒன்று உடனேயே தொடங்கப்பட்டது. கதைகளும் நிறைய வந்தன. மாதா மாதம் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு நூறு ரூபாய் சன்மானம கொடுத்து வந்தோம். இந்தப் போட்டியின் மூலம் பிரபலமடைந்தவர்தான் இன்று புகழுடன் விளங்கும் திரு நா. பார்த்தசாரதி. இவருடைய ‘வலம்புரிச் சங்கு’ கதை கல்கி மாதச் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பெற்ற கதைதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/90&oldid=1146034" இலிருந்து மீள்விக்கப்பட்டது