பஸ்பம்
31
பழைய மார்க்கத்தைத் தம் பிழைப்புக்கும் ஆதிக்கத்துக்கும் வழியாக்கிக் கொண்டிருந்த பூஜாரிக் கூட்டம், திகைத்தது. ரசமான பாடல்கள், சுவையுள்ள காதைகள், களிப்பூட்டும் கூத்துகள் ஆகியவைகள் மூலம் புராதன மார்க்கத்தைப் புகுத்தும் பணியிலே, புது உற்சாகம் காட்டி வேலை செய்து பார்த்தனர். பலன் விரும்பிய அளவு ஏற்படவில்லை. விசாரப்பட்டனர்.
கொடுமைகளுக்கு ஆளான மக்களோ, புத்தர் உண்மையைக் கண்டறிய எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை எண்ணினர். என்றும் தோன்றாத அளவுக்கு மனதிலே அவர்களுக்குத் தைரியம் ஏற்பட்டது.
மமதை நிரம்பிய மன்னர்கள், செருக்குமிகுந்த சீமான்கள், புத்த மார்க்கம் தந்த பொன்னொளியின் காரணமாகச் சீலர்களாகிவிட்டனர் என்று செய்திகள் பல பக்கங்களிலிருமிருந்து வந்த வண்ணமிருந்தன.
போக போக்கியத்திலே மூழ்கிக்கிடந்தவர்கள். புத்தரின் புத்தொளிக்கண்டு, ஆசைகளை அகற்றிக் கொண்டனர். சுயநலத்தை விட்டொழித்தனர் என்று செய்தி கிடைத்தது. அரசனுடைய அக்ரமத்தால் தாக்கப்பட்ட அர நாட்டு மக்கள், இன்றில்லாவிட்டால் நாளை, புத்தபிரானின் பொன்னொளி, இங்கும் பரவியே தீரும் என்று நம்பினர். கொடுமைகளைக்கண்டு கொதித்து எழும் போக்கினரோ அக்ரம ஆட்சியை எதிர்த்தொழிக்க வேண்டும் என்று துடித்தனர்.
மக்கள் மனதை மாற்றிக்கொண்டு வரும் புத்தயப்புயல் ஒரு புறம்.
அக்ரம ஆட்சியை அழித்தொழிக்கவேண்டும் என்ற புரட்சிப் பொறி மற்றோர் புறம்.
இருபெரும் சக்திகளும் ஒன்று கூடிவிட்டால்? மன்னன் மார்த்தாண்டன் இதனைத்தான் எண்ணி அஞ்சினான்.