பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

நீர் உயர வேண்டுமெனில் நிலம்சுற்றி உள்ள
நெடுவரப்பு இடையுள்ள சிறுவரப்பு யாவும்
சீர்பெறவே 'நன்றாகச் செப்பனிட வேண்டும்
செய்காலுக் கேற்றபடி உரமிடவும் வேண்டும்
வார்குழலே இல்லறத்தால் பலபிள்ளை என்னும்
மனத்தொல்லை வருமுன்னர் வழியடைக்க வேண்டும்
பார்சிறக்க நல்விளைச்சல் ஒன்றுமட்டும் போதா
பஞ்சமின்றிச் செழித்திருக்கக் குடும்பநலம் தேவை.

நோய்கண்டால் பயிருக்கு நூறுவகை தேடி
நோய்நீக்கும் நல்லுழவன், தன்வீட்டில் இல்லாள்
பாய்கண்டு படுத்திருக்கப் பலபிள்ளை பெற்றுப்
பலன்கண்டு நொந்திருக்கப் பார்த்திருக்க லாமா?
சேய்கண்டு வாழ்ந்திருந்தால் வான்பேறு கிட்டும்
செப்பிடுவார் இது.பழமை; ஒன்றிரண்டு பிள்ளை
வாய்கண்டால் நடைகண்டால் மொழிபேசக் கேட்டால்
மனத்திலெழும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமோ தோன்றும்?

கதிர்கண்டு வயல்சுற்றிக் களிப்படையும் உழவன்
களம்கொண்டு சேர்க்கும்நாள் காத்திருத்தல் போல
எதிர்கண்டு தன்பெண்ணின் தன்மகனின் மேனி
எழில்கண்டு திருமணத்தில் நன்னாளை எண்ணிக்
குதிர்கண்டு சோராமல் நற்குடும்பம் ஓம்பக்
குழந்தைகளைப் பெற்றெடுத்தல் குறைத்திடுதல் வேண்டும்
முதிர்வயதில் பிள்ளைகுட்டி என்கின்ற தொல்லை
மூளாமல் வாழ்ந்திருக்க இருகுழந்தை போதும்.

ஒருபுறத்தில் நம்நாட்டில் தாயகத்தில் எங்கும்
உறுதொழில்கள் சிறுதொழில்கள் உயர்ந்தோங்கும் வேளை
ஒருபுறத்தில் நல்லுழவு பொறுக்குவிதை தேடி
உயர்ந்துவரப் பிள்ளைகுட்டி உயர்ந்துவர லாமா?