பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. வயிரவாள்

தமிழ்த்தாய் வாழ்த்து
(சிந்து கண்ணி)

தமிழே அமுதெனச் சாற்றுவோம்!—அந்தத்
தமிழே உயிரெனப் போற்றுவோம்!—அந்தத்
தமிழே நிலவென ஏற்றுவோம்!—அந்தத்
தமிழே விளைவுநீர் ஊற்றுவோம்!
       தமிழ்வாழ்க! வாழ்கவே!

தமிழே மதுவுண்டே ஆடுவோம்!—அந்தத்
தமிழே வாழுமூர் நாடுவோம்!—அந்தத்
தமிழே உரிமையெனத் தேடுவோம்!—அந்தத்
தமிழே இளமைத்தாய் கூடுவோம்!
       தமிழ்வாழ்க! வாழ்கவே!

புலவர்க்குத் தமிழேகை வேலாம்!—இந்தப்
புலத்தின்சீர் உயர்வுக்கே வேளாம்!1—நெஞ்சம்
அலைவுற்ற வர்க்குச்செந் தேனாம்!—எங்கும்
அறிவுக்குத் துணை நிற்குத் தோளாம்!
       தமிழ்வாழ்க! வாழ்கவே!

புவிவாழும் யாவினும் மேலாம்—ஆன்றோர்
போற்றுதற் குரியநன் னூலாம்!—என்றன்
கவிதைக்கு வயிரத்தின் வாளாம்!—நாமெலாம்
கைகூப்பி வணங்குவோம் கோளாம்!

       தமிழ்வாழ்க! வாழ்கவே!