பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

45

நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே
வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் தனித்த வாண்முகத் தெதிரே
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்

மன்னிய பெருமநீ நிலமிசை யானே.[1]

செய்யுளைப் பாடி வரும்போது அவைக் களத்திலிருந்த புலவர் அனைவரும் அதன் கண் உள்ள சொற்பொருளமைதியில் ஈடுபட்டு, ஆனந்தித்திருந்தனர். அரசனும் அது தன் புகழாய் அமைந்திருப்பினும் புலவரது புகழையும் விளக்குவதாகையால், மகிழ்ச்சியோடு கேட்டு அவரை நோக்கி, “புலவரேறே, அருங்கருத்துக்கள் பலவற்றை எளிய சிறிய இனிய சொற்களில் அமைக்கும் திறம் வாய்ந்த நும்மைப்போன்ற பெரியோர்களே நம் நாட்டுக்குப் பெருங்கொடையாளர். நும் வாக்கில் இருந்து பிறந்த அமுதமொழிகளே இனி வருங்காலத்தில் தமிழ் நாட்டின் பண்டைப் புதையற் பொருளாய் வழங்கவுரியனவாம். எம்முடைய சிற்றறிவில் நீவிர் அமைத்திருக்கும் கருத்துக்கள் அனைத்தும் விளங்கா மையால், அவை விளங்குமாறு சிறிதளவு எடுத்துரைக்க வேண்டுகின்றேன். செய்யுள் செய்தவரே பொருளும் உரைத்தல் சிறப்பன்றோ?” என்றான்.


  1. புறநானூறு - செய்யுள், 6