பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பாண்டிய மன்னர்

அறிவே அறிவாமாகையால், அவ்வறிவை இன்னும் பெறாத யான் அறிவுள்ளேன் என்று எவ்வாறு கூறிக் கொள்வது ? ஆகையால், என் நாடு என்று ஒரு நாடு இல்லாத யான் என்னிடம் இல்லாத அறிவைப் பயன்படுத்துவது என்பது எவ்வாறு என்று எனக்குத் தோன்றவில்லை. எல்லாவுலகங்களும் எல்லாவுடம்புகளும் எவனுக்கு ஆலயமோ, அவனே அறிவின் உருவம்; அவனே அறியப்படும் பொருள். அறிபவனும் அவனேயாவன். இவ்வுண்மை வாசா கயிங்கரியம் ஆகாது, அநுபவ முதிர்ச்சியாகவே இங்கு முயற்சி செய்ய வந்தேன். இவ்வுடம்பைக் கொண்டு பெறலாகும் பயன் இதுவே. இது பெற்ற பிறகு இவ்வுடம்பு இருக்குமாயின், எந்நாட்டுக்கும் எவ்வுலகத்துக்கும் எவ்வுயிர்க்கும் உரிமையே. அப்பயன் பெறுங்காறும் இவ்விடத்தை விட்டு அசையுங் கருத்திலேன்.

மாறன்:—இவ்வுயர்ந்த நோக்கம் கொண்ட நும்மை இவ்விடத்தினின்று அகற்றுவதும் எனக்குப் பெருமை தராது. இளம்பருவத்திலே ஒரு சாலை மாணவராய்ப் பயின்றோமாகையால், அவ்வுரிமை கருதி இப்பொழுது எனது அரசியற் பொறையைத் தாங்கி யுதவும் அமைச்சராயிருக்குமாறு வேண்டிக்கொள்ள லாமோவென இங்கு வந்தேன். இங்கிருந்த வண்ணமே எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய அருந்தவம் இயற்றக் கருதியிருக்கும் நமக்கு அரசனாகிய அடியேனும் இயன்றவுதவி செய்யக் கடமைப்பட்டவனே. இத்தகைத் துறவுள்ளங் கொண்ட பெரியார் என் நாட்ட கத்திருப்பதே எனக்குப் பெருமையாம். அவகாச காலங்களில் வந்து தரிசனம் செய்துபோக அனுமதி கொடுத்தால் அதுவே போதுமானது. பெரும்பொறை வகித்-