பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பாண்டிய மன்னர்

தனது அரசிருக்கை நகராகிய மதுரையை நோக்கித் திரும்பினன். விரைந்து செல்லும் பரிமா ஒன்றின் மீது இவர்ந்து மெய் காவலர் இருவர் அருகிலே பின்பற்றி வர, நால்வகைக் கதிகளாலும் அதனை நடத்திக் கொண்டு போயினன்.

இடையிலே சில இடங்களிலே தங்கி இளைப்பாறி நாட்டு வளத்தையும் கண்காணித்துக்கொண்டு இரண்டு தினங்களில் மதுரை நகர் வந்து அடைந்தான் ; வெளிப்படையாக வரவேற்றல் முதலிய ஆடம்பரங்கள் ஒன்றும் இல்லாது அடக்கமாக அரண்மனைக்குட் சென்றான்; தன் அந்தரங்க அறைக்குச் சென்று இளைப்பாறினன்.

பின்னர் நன்னீராடி நல்லுடை யுடுத்து நம்பனைத் தொழுது, மலர் தூவிப்பணிந்து, உண்டியயின்று வெள்ளடை பாகு தின்று, முக வாசங் கொண்டு, அறிஞர், புலவர், அமைச்சர், தண்டத்தலைவர், முதலியோர் தன்னை எதிர் பார்த்துக் காத்திருந்த ஆஸ்தான மண்டபத்தை அடைந்தான். அங்கிருந்தார் அனைவரும் அரசனைக் கண்டதும் எழுந்து, தத்தம் நிலைக்கு உரிய முறையால் வணங்கினர். மாறன், மாகதர் வாழ்த்த வந்தியர் பாடத் தனது அரியணை யடைந்து அதன் மீது ஏறி யமர்ந்தனன். சிறிது பொழுது சென்றதும் அவைக் களத்தார் அனைவரும் தத்தமக்கு ஏற்ற ஆதனங்களில் அமர்ந்தனர்.

அமைச்சர் தலைவர் எழுந்து, “மன்னர் பெருமானே, தாங்கள் சென்றிருந்த அரும்பணி எவ்வாறு ஆயதோ வென அறிய யாம் பெரிதும் ஆவல் உடையோம்,” என்றார்.

அரசன்:— ஒரு வகையில் வெற்றியும் மற்றொரு வகையில் தோல்வியுமாயின. எவ்வாறெனில், நமது மூதாதையர் காலம் முதல் அமைச்சர் தலைவராயிருந்து