பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

87

நேர்ந்த நன்மாறன், மதுரையிற் பரம்பரைக் கணக்காயராய்த் தமிழ்ப் பயிரை வளர்த்து வந்த நக்கீரனாரையும் மதுரை மருதனிள நாகனாரையும் பிறபுலவரையும் பார்த்துப் பேசியே அநேக மாதங்கள் ஆய்விட்டன. இவன் இந்நிலையில் இப்பொழுதிருக்கும் உண்மையை அறியாத சோணாட்டுப்புலவர் சிலரும் சேரநாட்டுப் புலவர் சிலரும் இவனைக் கண்டு பரிசில் பெறக் கருதிப் பாண்டிய நாட்டுக்கு வந்து, தாம் எதிர் பார்த்த பயன் பெறாது மனஞ்சோர்ந்து மீண்டனர்.

சோணாட்டுப்புலவருள்ளே ஆவூர் மூலங்கிழார் என்பவர் மிகச் சிறந்த இயற்றமிழ்ப் புலவர்; அரும்பெருங் கருத்துக்களை அழகுறத் தெரிவிக்கும் செய்யுள் இயற்ற வல்ல சீரியர்; வறுமையினைத் தமக்கு அணியெனத்தாங்கிய புலவருட் பெரியார்; குமண வள்ளலது உண்மைப் பெருமையை உலகறியச் செய்த பெருந்தலைச் சாத்தனார்க்குத் தந்தையார். இத்தகைய பெரியாரது புகழ் நாடெங்கும் பரந்திருந்தது, தமை நன்கு ஆதரித்திருந்த சோணாடு நீங்கிப் பாண்டிய நாட்டின் கொடைக் குணத்தளவை அளந்தறிய வந்தார் போல மதுரை நகர் நோக்கி வந்தார். மதுரை நகர்ப் புலவரெல்லாம் அவரைக் கண்டு மிகவும் போற்றிப் பாராட்டினர். அரசரது ஆதரவைப் பெற்றாலன்றிப் புலவர்க்குப் பெருமையில்லையாகையால், பாண்டியன் நன்மாறனைக்கண்டுபாடிப்பரிசில் பெறுமாறு வந்திருப்பதை ஆவூர் மூலங்கிழார் மற்றப் புலவர்களிடம் கூறினர். மற்றப் புலவர்கள் தற்காலம் பாண்டியன் இருக்கும் நிலையை அறிந்தவர்களாகையால், ஆவூர் மூலங்கிழாரிடம் இன்னது சொல்வது என்று அறியாது