பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பாபு இராஜேந்திர பிரசாத்

மாகாணத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டிய அவசியமில்லை. பாட்னாவிலேயே தனது வக்கீல் பணியை ஆரம்பித்தார்.

வழக்குகள் ஏராளமாக அவரைத் தேடிவந்தன. வந்த வழக்குகளில் பெரும் வெற்றியே பெற்றார். அதனால் இராஜேந்திரருக்கு பீகார் மாகாணத்திலும், கல்கத்தாவிலும் நல்ல புகழும் பெயரும் உருவானது. காந்தியடிகளாருடைய தேச சேவையின் தொடர்பு இராஜேந்திரருக்கு ஏற்படும் வரை வக்கீல் தொழில் செம்மையான வருவாயுடன் நடைபெற்றது. காந்தி பெருமான் அவரை சுதந்திரப் போர்ப் பணிக்கு வருமாறு அழைத்துக் கொண்டார்.

கல்கத்தா ‘டப்’ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ராஜன்பாபுவுக்குத் தேசப் பணியில் ஈடுபட்ட அனுபவம் இருந்தது. 1905 ஆம் ஆண்டில் வங்களா மாகாணத்தை கவர்னராக இருந்த கர்சான் பிரபு இரண்டாகப் பிரித்தார். அதனால், அப்போது வங்க மாகாணம் மட்டுமன்று, ஏறக்குறைய இந்திய பூபாகமே கொதித்தெழுந்து எதிர்த்தது.

அந்த எதிர்ப்பு காரணமாகத்தான் அயல்நாட்டுத் துணி பகிஷ்கரிப்பு நடந்தது. இந்திய மக்களின் சுதேசி இயக்கம் நாடெங்கும் தீவிரமாக உருவாகியது. அந்த சுதேசிப் போராட்டத்தில் ராஜன் பாபுவும் கலந்து கொண்டார்.

சுதேசி இயக்கப் போராட்டம் நடந்த அடுத்த ஆண்டில் கல்கத்தா மாணவர்கள் சம்மேளனம் என்ற ஓர் இயக்கம் உருவானது. இந்த இயக்கத்தில் இளைஞர்களுக்கு சுதேசிப் பற்றும், தேசிய உணர்வுகளும் உருவாக்கப்படுவதே நோக்கமாக இருந்தது.

இந்த மாணவர் இயக்கம் ஏற்பட ராஜன் பாபு அரும்பாடுபட்டார் என்ற செய்தி காந்தியடிகள் போன்ற தலைவர்களுக்கெல்லாம் எட்டியது. காந்தியடிகளின் தொடர்பு ராஜன்பாபுக்கு ஏற்படும் முன்பே, அவருக்கு நாட்டுப் பணியாற்றிய அனுபவம் இருந்தது.