பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

23

அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகாசபை மாநாடு 1906 ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற போது, லோகமான்ய பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ், தாதாபாய் நெளரோஜி, மோதில்லா நேரு போன்ற இந்தியப் பெருந்தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டு, பிரிட்டிஷ் ஆட்சியை ஒவ்வொருவரும் அவரவர் நோக்கில் எதிர்த்து முழக்கமிட்டார்கள்.

இந்த தேசிய வீர உரைகளை எல்லாம் ராஜன்பாபு கூர்மையுடன், உற்று நோக்கிக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பேச்சுக்களது கருத்துக்கள் எல்லாம் அவருடைய சிந்தனையில் ஊடுருவி, தேசியக் தொண்டாற்றும் ஈடுபாட்டை மேலும் அதிகமாக்கியது. வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதே தனது நாட்டுக் கடமை என்று அவர் உறுதி செய்து கொண்டார்.

தேசிய மகாசபை காங்கிரஸ் தலைவரான கோபாலகிருஷ்ண கோகலேயிடம் இருந்து ராஜன்பாபுக்கு ஒரு கடிதம் வந்தது. இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்ற வருமாறு அக்கடிதத்தில் அவர் அழைப்பு அனுப்பியிருந்தார்.

கோபால கிருஷ்ண கோகலே சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழிகாட்டி, பண்பாளர்; எப்போதும் தேசத் தொண்டே அவரது மூச்சும்- பேச்சுமாக இருந்தது. அவர் இந்திய ஊழியர் சங்கத்தையும் உருவாக்கி இருந்தார். இந்த சங்க உறுப்பினர்கள் இந்திய மக்களின் வறுமை நிலையினை உணர்ந்து, அதற்காகக் குறைந்த சம்பளத்தையே பெற வேண்டும் என்று விரதம் பூண்டவர்களாவர். தங்கள் காலம் முழுவதையும் தேச சேவையிலேயே கழிக்க வேண்டும் என்பது அந்தச் சங்கத்தின் விதியாகும்.

ராஜன்பாபு ஆற்றியுள்ள செயல்கள் அனைத்தையும் அறிந்த கோபால கிருஷ்ண கோகலே, தனது ஊழியர் சங்கத்தில் சேர்ந்து தேசத் தொண்டாற்ற வருமாறு அழைத்திருந்தார்.