பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. இராஜன் பாபு மறைந்தார்!
வாழ்க அவர் எண்ணங்கள்!

பாரதநாடு பழம் பெரும் நாடு! பகுத்த ஞான சித்தர்கள் பெருகிய நாடு மாபெரும் தேசபக்தர்கள் வாழ்ந்து மறைந்த நன்னாடு, இந்நாட்டிற்கான விடுதலையை காந்தி பெருமான் பெற்றுத் தந்தான் என்று சுதந்திரம் பெற்ற பாரத நாட்டிலே மக்கள் காந்திப் பள்ளுப் பாடினார்கள்.

சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பதவி குடியரசுத் தலைவர் பதவி, இந்த உயர்ந்த பதவியை முதன் முதல் ஏற்றவர் ராஜன் பாபு! இந்த உயர்வுக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை உயர்த்திய சக்தி எது?

குடியரசுத் தலைவர் பதவியால் ராஜேந்திர பிரசாத் பெருமை பெற்றாரா? அல்லது ராஜன்பாபுவால் குடியரசுத் தலைவர் பதவி புகழ்மாலை சூடிக் கொண்டதா? என்றால் இந்த நூலைப் படிப்பவர்களுக்கு அந்த பெருமையின் அருமையை உணர முடியும்!

அடக்கம் என்ற அகத் தன்மையால் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய பெருமைக்குரியவர் பாபு ராஜேந்திர பிரசாத் உயர்ந்த அவரது வாழ்க்கைக்கு அவரிடம் குடி கொண்டிருந்த பல நற்குணங்களைக் காரணமாகக் கூறலாம்.