பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

19


மறுகணம் பூபாலன் வாய் அடைத்துப் போய் ‘யார் இந்த மனிதன்? நான் எங்கே இருக்கிறேன்? ஐயோ, என்னுடைய அருமை நாய்க்குட்டி எங்கே...?’ என்று மனத்திற்குள் வேதனைப் பட்டுக் கண்ணிர் வடித்தான்.

மறுபடியும் என்ன தோன்றிற்றோ, பூபாலன் எழுந்தான்; நடந்தான். காம் பவுண்ட் வாசலைத் தாண்டப் போனான். அப்போதும் அவனை யாரோ தடுத்து நிறுத்தியதை உணர்ந்தான். சற்று முன் எழுப்பிய அதே மனிதர்தான்! எவ்வளவு ஆடம்பரமாக உடை உடுத்துக் கொண்டிருக்கிறார் இவர்? எல்லாம் சில்க் மயம்!

“தம்பி, நீ யார்?”

“ஐயா, நீங்க யார்? அதை முதலிலே சொல்லுங்க!”

“ஹி, ஹி! சுட்டிப் பயலாக இருக்கிறாயே? பேஷ்! நான் யார் தெரியுமா? நான் தான் சுகுமார் சர்க்கஸ் கம்பெனி முதலாளி என் பெயர் சுகுமார். சரி, இப்போது உன் பெயரைச் சொல்.”