உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் உரைநடை

125

வேண்டும். மாற்றுக் கட்சி இல்லாத ஜனநாயக சர்க்கார், பிரேக் இல்லாத கார், கரை இல்லாத ஆறு, மூக்கணாங்கயிறு இல்லாத மாடு! ஆகவே ஆளும் கட்சிக்கு அது அடக்குவாரற்று அக்கிரமம் செய்யும் கட்சியாக மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள ஒரு மாற்றுக் கட்சி தேவை.” (நாம்)

பிறமொழிப் பதங்கள் தமிழில் சேர்வதை அண்ணாதுரை வெறுக்கவில்லை இதர மொழிச் சொற்களை அவர் தாராளமாகவே தன் உரைநடையில் எடுத்தாண்டிருக்கிறார்.

“நெறியில்லாதவனுக்கு நெறி காட்ட, ஒளி காணாதவனுக்கு ஒளிகாட்ட ஒரு ஜோதி—ஆண்டவன்!

அசுத்தமான உலகில் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதை விளக்க,

அநாகரிக உலகில் நாகரிக போதனையின் நாதனாக விளங்க.

கபடம்; வஞ்சகம், காய்ச்சல் முதலியன கொண்ட உள்ளத்திலே, கருணை, நேர்மை, அன்புடைமை முதலிய அருங்குணங்கள் உண்டாகச் செய்ய ஒரு குருநாதன் ஆண்டவன்! எங்கும் நிறைந்து, எந்தச் சக்தியும் பெற்று எல்லையில்லாத இன்பத்தின் எல்லையாகி, சத்திய சொரூபியாகி, சாட்சாத்காரமாகி, சகல ஜீவாத்மாக்களுக்கும் ரட்சகனாகி, பதியாகி உள்ள பரமன்—ஆண்டவன்.

கடவுளைப் பற்றிக் கசிந்து கண்ணீர் மல்கி, பலர் கூறுவர் இதுபோல! ஆம். நெறி, ஒளி, நீதி, வாய்மை, தூய்மை, அன்பு—இவையே கடவுள். அழிவான தெய்வமே! எங்கும் நிறைகின்ற பொருளே! அன்பே சிவம்! உண்மையே ஆண்டவன்!—என்று பலர் போதித்தனர்.” (தேவலீலைகள்)

அண்ணாதுரை பல சிறுகதைகளும், சில நாவல்களும் எழுதியுள்ளார். அவருடையவை ‘சிறுகதை’களே அல்ல; நாவல்கள் இலக்கியத் தன்மை பெற்றனவாகவும் இல்லை.