16. லா. ச. ராமாமிருதம்
சொற்களைக் கொண்டு அற்புதமான கலைச்சித்திரங்கள் அமைப்பதில் தனித் தேர்ச்சியும், ஆற்றலும் பெற்ற படைப்பாளி லா. ச. ராமாமிருதம் ஆவார். அவருடைய கதைகள் தனிச்சிறப்புடன் திகழ்வதற்கு, கதைகளில் அவர் எடுத்தாள்கிற விஷயங்களைப் போலவே, அவர் கையாள்கிற உரைநடையும் முக்கியக் காரணங்களின் ஒன்று ஆகும். எடுத்துக்கொண்ட விஷயத்தைக் கலைநயத்தோடு கதையாகப் பின்னுவதில் அவர் காட்டுகிற சிரத்தையையும் உற்சாகத்தையும், கதையைச் சொல்லிச் செல்கிற நடை அமைப்பிலும் அவர் ஈடுபடுத்தியிருக்கிறார். ஆகவே, அவருடைய எழுத்துக்கள் உயிரும் உணர்வும் பொதிந்த அழகிய சொற் சித்திரங்களாக விளங்குகின்றன.
கதையில் வரும் சூழ்நிலைகளைச் சித்திரிப்பதிலும், கதைமாந்தரின் உணர்ச்சிகளை வர்ணிப்பதிலும் லா. ச. ர. மிகுந்த அக்கறை காட்டியுள்ளார். அத்தகைய கட்டங்களில் அவருடைய உரை நடை கைத்தேர்ச்சியுடன் உருவாக்கப்பெற்ற எழிற்கோலமாக வளர்கிறது.
‘அபூர்வ ராகம்’ என்ற கதையில் வருகிற ஒரு கட்டம் இது—
“புயலில் குடையைக் கொண்டு போக சாத்தியமில்லை. தூறல் முகத்தில் சாட்டை அடித்தது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் குடைக்கம்பி கனத்தில் பளபளத்துக்