18. கொச்சை நடை பற்றி
இத்தொடரில் ‘எழுத்தில் கொச்சை’ பற்றி எழுதியபோது இலக்கியத்தில் கொச்சை குறித்து லா. ச. ராமாமிர்தம் அருமையான கட்டுரை ஒன்று எழுதியுள்ளார் என்று சொல்லியிருந்தேன். 1956–ம் வருஷம் லா. ச. ரா. எழுதியுள்ள ‘இலக்கியத்தில் கொச்சை’ என்ற அந்தக் கட்டுரையின் முக்கியமான பகுதிகள் இங்கே தரப்படுகின்றன...
“நான் சொல்லப்போவது எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல; வாசகர்களுக்கும்தான். நாட்டின் இலக்கியத்தை உருவாக்குவதில் இருவருக்கும் சம முக்கியமுண்டு.
எப்படியும் ஒன்று நிச்சயம். வாழ்க்கை, எழுத்தாளன். வாசகன், வாசிக்காதவன் எல்லோருக்கும் பொதுவானது, ஒற்றுமை, வேறுபாடு, தர்க்கம், சம்மதம், மதம், விஞ்ஞானம், தெய்வம், நாஸ்திகம், நம்பிக்கை, அவநம்பிக்கை, இந்த உலகம், இதை மீறியன, உள்ளவை, இல்லாதது, பொய், நிஜம், மணம் நினைப்பது, நினைக்க முடியாதது, ‘பூ! வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?’ என்று உதறித்தள்ளுவது உள்பட எல்லாமே இவ்வாழ்க்கையுள் தாம் அடங்கி இருக்கின்றன. இதை மீறி எழுதவோ, படிக்கவோ, சிந்திக்கவோ, அனுபவிக்கவோ, வாழவோ எதுவுமில்லை.