பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பாரதிதாசன்

நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்
நிரப்புவாய், அவர் அளிக்கும்
நைஞ்சநற் பழத்தை உண்பாய்
கூழேனும் நன்றே என்பாய்

என்று இனிதாகப் பாடுகிறார்.

கவிஞன் இயற்கைக் காட்சியைக் காணும்போது, அக்காட்சிகள் அவன் உள்ளத்தில் ஓவியங்களாகப் பதிகின்றன. அவ்வாறு உள்ளத்தில் பதிந்த ஓவியக் காட்சிகளுக்கு உயிர்கொடுத்து நிலை பேறுடைய படிமங்களாக (Images) ஆக்கிப் படிப்பவர் நெஞ்சத்தில் நிறுத்துகிறான். கவிதையைப் படிக்கும் போதெல்லாம். இந்த அழகோவியங்கள் திரைப்படங்களாக நம் நெஞ்சத்தில் ஓடுகின்றன.

பாரதிதாசன் தமது கவிதையில் அடுக்கடுக்காக ஓவியம் தீட்டுவதில் வல்லவர். மயிலின் தோகையில் எத்தனை ஓவியங்கள்!

உனது தோகை புனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்
ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்

கண்ணாடித் தரைபோல் காட்சியளிக்கும் குளத்து நீரில் மிதக்கும் பசிய தாமரை இலைத் தட்டில், தவழ்ந்து விளையாடும் தண்ணீர்த் துளிகளை இயற்கை தீட்டிய அழகோவியமாகவே வடித்துக் காட்டுகிறார், பாரதிதாசன்.

கண்ணாடித் தரையின் மீது
கண்கவர் பச்சைத் தட்டில்
எண்ணாத ஒளிமுத்துக்கள்
இறைந்தது போல், குளத்துத்
தண்ணிரிலே படர்ந்த
தாமரை இலையும் மேலே
தெண்ணிரின் துளியும் கண்டேன்;
உவப்போடு வீடு சேர்ந்தேன்.