பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக் கவிஞர்

69

புறாவுக்கு ஒழுக்கமான ஓர் உணவுப் பழக்கம் உண்டு. முண்டியடித்து முட்டிமோதும் பழக்கம் மாந்தருக்குத்தான் உண்டு. பாரதிதாசனைக் கவர்ந்த இவ்வொழுக்கம் அழகான ஓவியமாகிறது.

இட்டதோர் தாம ரைப்பூ
இதழ்விரிந் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்து மில்லை;
வேறுவே றிருந்த ருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்க மில்லை.

ஆங்கிலக் கவிஞன் கீட்சைப் போலப் பாரதிதாசனும் ஓர் வண்ணக் கவிஞர் (Poet of colour). அவருக்கு வண்ணங்களில் அளவற்ற ஈடுபாடும் உண்டு. இயற்கையில் படிந்துள்ள வண்ணவேறுபாடுகளை எப்படியெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அப்படியெல்லாம் பாட்டில் பதிவு செய்கிறார்.

குயிலைப் பொதுவாகக் கருங்குயில் என்போம். ஆனால் குயில் கறுப்பில்லை. அதன் கறுத்த மேனியில் இலேசாகத் தங்க முலாம் பூசியது போல இருக்கும். இந்த மாயம் பாரதிதாசனின் கூர்த்த கட்புலனுக்குத்தான் தட்டுப்பட்டது.

செங்கதிர் சீர்க்கையால்
பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த
கருங்குயிலே கூவாயோ?

என்று பாடிய பாரதிதாசன், அந்தி வானத்தின் செங்கதிர்ப் பூச்சைக் குயிலின் நிறத்தோடு ஒப்பிட்டு எப்படி மகிழ்ந்திருக்கிறார் என்பது புலனாகும்.

வீட்டில் புறா வளர்க்கும் பழக்கம் பாரதிதாசனுக்கு உண்டு. புறாக்களின் வண்ணங்கள் அவருக்கு அத்துபடி அவற்றின் வண்ணங்களை அடுத்தடுத்த படிமங்களில் அழகாகத் தீட்டுகிறார்: