பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பாரதிதாசன்

இருநிலா இணைந்து பாடி
இரையுண்ணும்; செவ்வி தழ்கள்
விரியாத தாமரை போல்
ஓரிணை மெல்லியர்கள்
கருங்கொண்டை கட்டி ஈயம்!
காயாம்பூக் கொத்து! மேலும்
ஒருபக்கம் இருவா ழைப்பூ!
உயிருள்ள அழகின் மேய்ச்சல்.

நாடகம் என்பது உணர்ச்சி மோதல்களின் வெளிப்பாடு. மாந்தரிடத்தில் காணப்படும் காதல், வீரம், அவலம், தாயன்பு, பகைமை, சீற்றம், போர்க்குணம் ஆகிய இயல்பூக்கங்கள் (lnstincts) பறவைகளுக்கும் உண்டு. இவ்வுணர்ச்சிகள் பொங்கி வழியும்போது நாடகக் காட்சிகளாக அமைகின்றன. அக்காட்சிகளில் நடிக்கும் பறவைகளின் மெய்ப்பாடுகளையும் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் பார்திதாசன்.

தலைதாழ்த்திக் குடுகு டென்று
தனைச்சுற்றும் ஆண்பு றாவைக்
கொலைபாய்ச்சும் கண்ணால், பெண்ணோ
குறுக்கிற்சென்றே திரும்பித்
தலைநாட்டித் தரையைக் காட்டி,
இங்குவா என அழைக்கும்
மலைகாட்டி அழைத்தா லுந்தான்
மறுப்பாரோ மையல் உற்றார்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நடைபெறும் அன்பு நாடகம் உள்ளத்தை நெகிழ்விக்கும் தன்மையது. புறாக் குடும்பத்தில் நடைபெறும் அது போன்ற ஒரு நாடகக் காட்சியைக் கவிஞர் சிறப்பாக நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்.

தாய்இரை தின்ற பின்பு
தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும் குஞ்சு
தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்