பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக் கவிஞர்

71

தாய்அருந்தியதைக் கக்கித்
தன்குஞ்சின் குடல் நிரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்!
அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்

குழந்தைக்குத் தாய் மட்டுமே நம் வீடுகளில் கொஞ்சிக் கொஞ்சி உணவூட்டுவதைப் பார்க்கிறோம். ஆனால் குஞ்சுகளுக்குத் தாயும், தந்தையும் மாறி மாறி உணவூட்டும் அன்புப் பரிமாற்றத்தைப் பறவைகளிடம் தானே காணமுடிகிறது.

புறா நீர் அருந்தித் தன் வேட்கையைத் தணித்துக் கொள்ளும் போது, அதனிடத்தில் தோன்றும் மெய்ப்பாடுகளைப் பாரதிதாசன் இனிய நாடகமாக்கிக் காட்டுகிறார்.

அகன்றவாய்ச் சட்டி ஒன்றின்
விளிம்பினில் அடிபொருந்தப்
புகும்தலை; நீர்வாய் கொண்டு
நிமிர்ந்திடும்; பொன் இமைகள்
நகும்; மணி விழிநாற் பாங்கும்
நாட்டிடும்; கீழ் இறங்கி
மகிழ்ச்சியாய் உலவி வைய
மன்னர்க்கு நடைகற் பிக்கும்

நாடகத்தில் காணப்படும் 'கம்பீர ராஜநடை' இங்கும் இடம் பெறுகிறது. ஆடற்கலைக்குப் பாவமும், அடைவும் முக்கியம். அந்நாட்டியப்பண்புகளை மயிற்புறாவிடம் கண்டு மகிழ்கிறார் பாரதிதாசன்.

மயிற்புறா படம் விரிக்கும்;
மார்பினை முன் உயர்த்தும்
நயப்புறு கழுத்தை வாங்கி
நன்றாக நிமிர்ந்து, காலைப்
பயிற்றிடும்; ஆடல் நூலின்
படிதுக்கி அடைவு போடும்
மயிற்புறா வெண்சங்கு ஒக்கும்
வால்தந்த விசிறி ஒக்கும்