பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பாரதிதாசன்


மார்பகங்களை முன்னுயர்த்துவதும், கழுத்தை வெட்டுவதும் நாட்டிய மங்கையரிடம் நாம் அடிக்கடிப் பார்த்து மகிழும் சுவையான காட்சிகள். தந்த விசிறி மயிற்புறாவின் வாலுக்கு அழகான உவமை.

புறாக்களிடம் காணப்படும் இல்லற ஒழுக்கத்தைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், மக்களிடம் காணப்படும் குறைகளைச் சாடுகிறார்.

ஒரு பெட்டை தன்ஆண் அன்றி
வேறொன்றுக் குடன்ப டாதாம்
ஒரு பெட்டை மத்தாப்பைப் போல்
ஒளிபுரிந்திட நின் றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட் டால்தான்
ஒன்றுமற் றொன்றை நாடும்.

நம்மிடத்தில் நிலவும் பலதார மணத்தையும், சின்ன வீட்டுப் பழக்கத்தையும் நயமாகக் கண்டிக்கிறார் பாரதிதாசன்.

கலாப மயிலின் நீண்ட கழுத்தைப் பார்த்ததும், பாரதிதாசனுடைய கற்பனை சிறகடித்துப் பறக்கிறது. அம்மயிலை அருகில் அழைத்து "நீயும் பெண்களும் நிகர் என்று சொல்லுகிறார்கள். உண்மைதான் என்றாலும் உன்னுடைய கழுத்துக்கு அவர்களுடைய கழுத்து ஒப்பாகுமா? இயற்கை அன்னை உனக்கு நீண்ட கழுத்தையும் பெண்களுக்குக் குட்டைக் கழுத்தையும் ஏன் கொடுத்தாள் தெரியுமா?" என்று ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு

அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே
இயற்கை அன்னையிப் பெண்களுக் கெல்லாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள் உனக்கோ
கறையொன்றில்லாக் கலாப மயிலே!
நிமிர்ந்து நிற்க நீள்கழுத்தளித்தாள்

என்று கூறுகிறார்.