பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக் கவிஞர்

73


அடுத்தவர் நடப்பில் விரும்பி மூக்கை நீட்டும் பழக்கம், பெண்ணினத்தின் மீது படிந்துள்ள கறையாகக் கவிஞர் நினைத்தார் போலும். என்றாலும் பெண்கள் என்ன கூறுவார்களோ என்ற அச்சம் அவருக்கில்லாமல் இல்லை. எனவே மயிலை அருகில் அழைத்து "நான் சொன்னதைப் பெண்களிடம் சொல்லிவிடாதே அவர்கள் என்னை ஏசுவார்கள்" என்று மெதுவாக அதன் காதில் ஓதுகிறார்.

"நல்லவேளை கவிஞர் இதைக் கலாப மயிலான ஆண்மயிலிடம் தான் கூறினார். இதையே பெண் மயிலிடம் கூறியிருந்தால் அது கவிஞரைக் கொத்தியிருக்கும்" என்று கவிஞர் செளந்திரம் கைலாசம் நயம்படக் கூறுகிறார்.

கோழிச் சேவல் காதலர்க்கு எதிரி. அது நேரந்தெரியாமல் கூவி, அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் இயல்பினது. சங்கப் புலவர் முதல் பலர், தமது பாடலில் கோழியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கின்றனர். ஆனால் பாரதிதாசன் சட்டமன்றத்துக்கே சென்றுவிட்டார்.

சட்டமன்றம்கோழி வளர்ப்பதைத் தடைசெய்யுமா?
தொட்டார் கைதொட்டுத் தொடருமுன்-பட்டப்
பகலாயிற் றென்று பறையடிக்கும் சற்றும்
அகலார் அகலும் படிக்கு!

பாரதிதாசன் பாடிய பறவைப் பாடல்களில் வானம்பாடி குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் பாடிய வானம்பாடிப் பாடலுக்கும், ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் பாடிய கக்கூ (Cuckoo) என்ற பாடலுக்கும் ஒரு பொதுத் தன்மை இருக்கக் காணலாம்.

சிறு குன்றுகள் சூழ்ந்த ஸ்காத்லாந்து ஏரிக்கரையில் படுத்த வண்ணம் இயற்கையழகை மாலை நேரத்தில் சுவைப்பது வோர்ட்ஸ் வொர்த்தின் விடுமுறைக் காலப் பொழுதுபோக்கு. அவ்வாறு படுத்திருக்கும்போது உள்ளத்தை உருக்கும் ஒரு தேனிசை வானவெளியில் வட்டமிடுவதைக் கேட்டான். ஆனால் அந்த இசை எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த இசையை எழுப்புவது யார் என்றும் அவன் கண்ணுக்குப் புலனாகவில்லை.