பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தருக்குக் கிடையாது. எவர் எதைச் சொன்னாலும் நம்பும் இயல்பினர் அவர். படம் எடுக்க வேண்டுமென்றால் நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும், படப்பிடிப்பு அரங்கிற்கும் முன்பணம் கொடுக்க வேண்டும். வரலாற்றுப் படமான பாண்டியன் பரிசைப் பெரும்பாலும் வெளிப்புறக் காட்சியில் படமாக்க கேவண்டும். இதை நிர்வாகம் செய்யப் பட்டறிவு மிக்க திரைத்துறை ஆட்கள் தேவை. கவிஞர் நிலைக்கு இதெல்லாம் சாத்தியமா?

திரைப்படத்திற்குரிய கதை, வசனம் எழுதித் தயார் நிலையில் உள்ளது. சென்னை வாழ்க்கை இவர் கொண்டு வந்த பணத்தை வேகமாகக் கரைத்தது. படப்பிடிப்பு துவங்கவில்லை. கூட்டாளிகள் முணுமுணுத்தனர். ஒரு கூட்டாளி வங்கியில் இருந்த பணத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு புதுச்சேரிக்குச் சென்றுவிட்டார். காரோட்டி இவர் பெட்டியிலிருந்து கணிசமான தொகையை எடுத்துக் கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டான். புவனகிரி பாலு என்ற பங்குதாரர் பாரதிதாசன் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சிவாஜி கணேசன் வீட்டுக்கு அடிக்கடி சென்று, அவரைப் பாரதிதாசன் பார்த்துவிட்டு வருவார். சிவாஜி கணேசனும், இயக்குநர் பீம்சிங்கும் பாரதிதாசனுக்குக் கீழ்க்கண்டவாறு யோசனை கூறினர்;

"பாண்டியன் பரிசு வரலாற்றுப் படம். அதை எடுக்க நிறையப் பணம் செலவாகும். வெளிப்புறக்காட்சிகள், போர்க்காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். வேறு ஏதாவது சமூகப் படமாக இருந்தால் செலவு குறையும். வேறு ஒரு கதையைத் தேர்ந்தெடுங்கள்" என்றனர். பாண்டியன் பரிசு கைவிடப்பட்டது. முட்டாள் முத்தப்பா என்ற கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்குக் கதை வசனம் எழுதத் தொடங்கினார் பாரதிதாசன். வீண் செலவின் காரணமாக நிறுவன ஆட்கள் நிறுத்தப்பட்டனர். காரும் விற்கப்பட்டது. இந்தச் சூழ் நிலையில் புலவர் பொன்னம்பலனாரின் மாணவரான பொன்னடியான் பாரதிதாசனின் துணைக்கு வந்து சேர்ந்தார்.

பாரதிதாசனுக்குத் திரைத் துறையில் சில நல்ல நண்பர்களும் இருந்தனர். அவர்களுள் நடிகர் எம்.ஆர். இராதாவும் ஒருவர். அவர் எப்போதும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். அவர் பாரதிதாசனிடம் ஒருநாள், "வாத்தியாரய்யா! உங்களுக்கு ஏன் இந்த வெட்டிவேலை. திரைப்படத்துறையில் உள்ளவர்களை நம்பி வீணாக