உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 எது பழிப்பு?

1

த்து வயதில் பழனியப்பன் வீட்டினிலே
முத்தம்மை என்னும் முதிராத செங்கரும்பு
வேலைசெய்திருக்கையிலே வேம்பென்னும் தாயிறந்தாள்.
மேலுமோர் ஆண்டின்பின் தந்தையாம் வீரப்பன்
தானும் இறந்தான். தனியாக முத்தம்மை
கூனன் வரினும் குனிந்துபுகும் தன்குடிலில்
வாழ்ந்திருந்தாள் அண்டை அயல்வாழ்வார் துணையோடு!
தாழ்ந்திடுதல் இன்றியே தன்வருமா னத்திலே
நாளைக் கழித்துவரும் நங்கை பருவமுற்றாள்.
தோளை அழகுவந்து கெளவியது, முன்னிருந்த
வண்ண முகமேதான் வட்டநிலா ஆகியது.
மொட்டு மலர்ந்தவுடன் மொய்க்கின்ற வண்டுகள்போல்
கட்டழகி அன்னவள்மேல் கண்வைத்தார் ஆடவர்கள்.

2

அச்சகத்தில் வேலைசெய்யும் அங்கமுத்துத்தான் ஒருநாள்
மெச்சுமெழில் முத்தம்மை மெல்லியினைத் தான்கண்டு
தன்னை மணந்துகொண்டால் நல்லதென்று சாற்றினான்,
இன்ன வருமானம் இன்னநிலை என்பவெல்லாம்
நன்றாய்த் தெரிந்துகொண்டு நல்லதென்றாள் முத்தம்மை.
ஊரார்கள் கூடி ஒருநாள் திருமணத்தைச்
சீராய் முடித்தார்கள். செந்தமிழும் பாட்டும்போல்
அங்கமுத்து முத்தம்மா அன்புடனே வாழ்ந்துவந்தார்
இங்கிவர்கள் வாழ்க்கை இரண்டாண்டு பெற்றதுண்டு

83