114
கொள்வதே நன்றாகும். அன்னிய தேசங்களில் விடுதலைக்காக உழைக்கும் ஸ்திரீகள், பெரும்பாலும் ஆண்மக்களின் உதவியை அதிகமாக நாடாமல் தமது மேம்பாட்டுக்குரிய வேலைகளைத் தாங்களே செய்து வருவதை நம் தேசத்து ஸ்திரீகள் நன்கு கவனிக்க வேண்டும்.
தமிழ் நாட்டு மக்களே! ஆரம்ப முதல் சமீப காலம் வரை ஆசாரத் திருத்தத் தலைவர்கள் பெரும்பாலும் தேசாபிமானம், ஸ்வபாஷாபிமானம், ஆர்ய நாகரீகத்தில் அனுதாபம் இம்மூன்றும் இல்லாதவர்களாக இருந்து வந்த படியால், பொது ஜனங்கள் இவர்களுடைய வார்த்தையைக் கவனிக்க இடமில்லாமல் போய்விட்டது. எனினும், அவர் களுடைய கொள்கைகளிற் பல மிகவும் உத்தமமான கொள்கைகள் என்பதில் ஐயமில்லை.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”
தேசாபிமானம் முதலிய உத்தம குணங்கள் இல்லாவிடினும், இந்த முயற்சி தொடங்கியவர்கள் உலகப் பொதுநீதிகளை நன்குணர்ந்தோர். யாவராலே தொடங்கப்பட்டதாயினும், இப்போது இம் முயற்சி தேச ஜனங்களின் பொதுக்கார்யமாக பரிணமித்து விட்டது. எனவே, இவ் வருஷத்து மஹா ஸபையில் தமிழ் மக்கள் பெருந்திரளாக் எய்தி நின்று, ஸபையின் விவகாரங்கள் பெரும்பாலும் தமிழிலேயே நடக்கும்படியாகவும், தீர்மானங்கள் பின்பு தேச ஒழுக்கத்தில் காரியப்படும் வண்ணமாகவும் வேண்டி ஏற்பாடுகள் செய்யக் கடவர். எதற்கும் பிரதிநிதிகள் நல் பெருங்கூட்டமாக வந்தால்தான் நல்ல பயன் ஏற்படும். ஜெர்மன் பாஷையில் “கூட்டம்” என்பதற்கும், “உத்ஸாஹம்” என்பதற்கும் ஒரே பதம் வழங்கப்படுகிறது.