21
நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே
சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ?
வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை.
மூட மதியாலோ, முன்னைத் தவத்தாலோ
ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்,
மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும்
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருருவி செய்த பின்னர், மேனிவிடாய்
எய்தி யிருக்கு மிடையினிலே, பாவியேன்
வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்;
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன்;
வாலிலடிப்பட்டு மன மகிழ்வேன்' ‘மா’ வென்றே
ஓலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்:
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றிக் கழனியெல்லாம் மேய்ந்து, நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத் திருந்து பல கதைகள் சொல்லிடுவேன்;
காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே!
தாளைச் சரணடைந்தேன். தையலெனைக் காத்தருள்வீர்.
காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்,
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால்,
தானா வுரைத்தலின்றிச் சாரும் வழியுளதோ?
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்,
இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ?
தேவர் முன்னே அன்புரைக்கச் சிந்தை வெட்கங் கொள்வதுண்டோ?
காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்?
ஆசை தான் வெட்கம் அறியுமோ?”