262
லா. ச. ராமாமிருதம்
பெங்களூர்ப் புழுதியைக் காலிலிருந்து உதறிவிட்டு மறுநாள் காலை சென்னையில் அந்தக் காலை வைத்ததால் நான் உடனே விருக்ஷமாக மாறிவிட முடியுமா? நினைவு நூல் நுனியைச் சிக்கிலிருந்து என்னால் இயன்றவரை இழுக்கிறேன்.
எழும்பூர் ஸ்டேஷனிலிருந்து ஜட்காவில் - தக்கடா, புக்கடா, கடகடா, கடகடா, சக்கரத்தின் விட்டங்களிடையே ஜாட்டிக்கோலைக் கொடுத்து வண்டிக்காரன் எழுப்பும் சப்தம் - குழந்தைகளுக்குத் தனிக் குஷி - வீடு வந்தாச்சு.
குடுகுடுவென்று ஒரு ஸ்திரீ ஓடிவந்து எங்களை ஒவ்வொருவராக முதலில் அணைத்துக்கொண்டு, உருப்படி உருப்படியாகக் கீழே இறக்குகிறாள்.
“வாங்கோடா என் கண்களா?” அந்த வரவேற்பு இன்னும் மறக்கவில்லையே!
“வாங்கோ மன்னி! அண்ணாவை வாங்கோன்னு சொன்னேன்னு சொல்லுங்கோ மன்னி!”
“ஒரே வழியாக வந்துட்டோம் பார்வதி! நீ செளக்கியமா?”
பார்வதி சித்தி, சிறுகூடாக, மடிசார் கட்டிக் கொண்டு, மரப்பாச்சி மாதிரி –
“குழந்தைகளா, சமையலாயிடுத்து, சாப்பிட்டுடுங்கோ. மத்தியானம் குளிப்பாட்டி விடறேன், குழாயில் தண்ணி வந்தால்.“
திருவல்லிக்கேணி அருணாசல ஆச்சாரித் தெருவில் அன்றிலிருந்தே தண்ணீருக்குத் தகராறுதான். குழாய்க்கு