பாற்கடல்
45
இந்த அவஸ்தையேதான் உயிரின் இயக்கமே. ஆனால், இதிலும் எதோ ஒரு செம்மை, கோலத்தின் ஒழுங்கு, ஏற்பாடு தெரிகிறது. கோலம், அதன் புள்ளிகள், புள்ளிகளைக் கட்டிய கோடுகள், கோடுகளின் இழைவு, இத்தனைக்கும் அடிக்கோடு, ஒரு கோடு எங்கே ஆரம்பித்தது. அதுவே ப்ரக்ஞையாக நுனியென்று இழுக்கப் பார்த்து வகிடுகள் ஏதேதோ பிரிகின்றன. கலை, சுயப்ரக்ஞை, தருணம், அவசம், பரவசம் அவரவர் கண்டது அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி.
இந்தக் கூச்சங்கள், யாருடைய தனி உரிமையல்ல, எல்லோருக்கும் சிருஷ்டி ஈன்ற செல்வம். அவரவர்க்கு அவரவர் பங்கு சேர்ந்துகொண்டுதாணிருக்கிறது. என் பங்கு என் வழியில் என் எழுத்து. என் சொல்லில் ஜீவனின் பரம்பரையின் பெருமையைப் பறைசாற்றல். நம் பெருமை. நீயும் நானுமிலாது நாம் இல்லை. அதனாலேதான், பெருந்திருப் பாட்டி மடியில் தவழ்ந்து விளையாட உன்னையும் அழைக்கிறேன்.
பாட்டி, அப்பா, அம்மா, உடன்பிறந்தவர், மனைவி, குழந்தை, பெண்டிர், பேரன், பேத்தி - குடும்பத்தைப் பற்றியே நான் எழுதுகிறேன் என்று எனக்கு ஒரு பேர். அதுவே ஒரு குற்றச்சாட்டைப் போலவும் சில சமயங்களில் த்வனிக்கிறது. எதற்குமே லேபிள் ஒட்டி விடுவதில், அந்த லேபிலினுள் யாவற்றையும் அடக்கி அல்லது அடக்கப் பார்ப்பதில் நமக்குத்தான் என்ன ஆர்வம் !
அவள், டப்பாமேல், கொட்டை எழுத்தில் துவரம் பருப்பு என்று எழுதி ஒட்டியிருப்பாள்.
மாதத்தில் ஒருவேளை, அரைவேளை அவன் ஆபீஸ் அவசரத்தில் சமைக்கவும்