240 இ. புலவர் கா. கோவிந்தன் காட்டி, அதனால், அவனுக்குப் பழியுண்டாக வழி செய்தல், நின் பெருமைக்குப் பொருந்தாது. கணவன் பிரிந்து சென்று கொடுமை செய்து விட்டான் என்பது உண்மை. ஆனால், அதைப் பலரும் அறிந்து, அவனைப் பழிக்குமாறு, இவ்வாறு வெளிப்படுத்தி வருந்தி நிற்றல் கூடாது. அவன் கொடுமையே செய்யினும், அதை மறைந்து வாழ்வதே மனைவிக்கு மாண்பாகும்!” என அறிவுரை கூறினாள். * அது கேட்ட அப் பெண், "தோழி! தோட்டத்தில் காஞ்சி மரம் மலர்ந்திருக்கும் காட்சியைக் காண்கிறேன். அக்காஞ்சி மலரின் மகரந்தப் பொடி படியப் பொன்னிறம் பெற்ற கருங்குயிலின் குரலைக் கேட்கிறேன். இளவேனிற் காலம் இது என உணர்கிறது என் உள்ளம். உடனே, இவ் விளவேனிற் காலத்தில், உடனிருந்து இன்பம் நுகர எண்ணாது, பிரிந்து வாழும் அவர் கொடுமையினை நினைந்து வருந்துகிறது என் நெஞ்சம். அவ்வாறு அவன் கொடுமை கூறி வருந்தாது, மறைத்து வாழலாம் எனினும், அதனால் பெரும் பயனில்லை. அதை யான் மறைப்பினும், மன்றில் பொய்ச் சான்று பகர்ந்த கொடியோன் ஒருவன், நிழல் கருதி நின்ற மரமும், அக் கொடியோன் கொடுமை யால் கரிந்து, கவின் இழத்தல் போல், பிரியேன் எனத் தான் கூறிய சூளுரை பொய்யாகப் பிரிந்து சென்ற அவன் கொடுமை, அவனைச் சேர்ந்து வாழ நினைக்கும் என் உள்ளத்தைச் சுட்டெரித்து, என் உடல் அழகைக் கெடுத்து விடுகிறதே, அதற்கு யான் என் செய்வேன்? தோழி! மரங்கள் தம் கிளைகள் பொறை தாங்காது தளர்ந்து வளையுமாறு மலர்களால் நிறைந்து நிற்கும் காட்சியைக் காணுகிறேன். அம் மலர்களில் உள்ள தேனைப் பருக,