பாலைச் செல்வி உரைத்திலராயினும், சின்னாட்களாக அவர் செயலைக் கூர்ந்து நோக்கிய எனக்கு அவர் கருத்துப் புலனாகி விட்டது. தோழி! அவரைப் பிரிந்த பின்னர்த் தனித்திருந்து உயிர் வாழ்தல் எவ்வாறு இயலும்?" என வாய் விட்டுக் கூறி அழுது வருந்தினாள். அவள் நிலை அறிந்து, ஆறுதல் உரைத்த தோழி, பின்னர் அவள் கணவனைச் சென்று கண்டாள். அவனும் அவள்பால் பெருமதிப்புடையன். ஆதனால், அவளை அன்போடு வரவேற்று, 'வந்தது ஏனோ ?” என வினவினான். அவள், அவன் மனைவியைக் கண்டதும், அவள் வருத்தமும் கூறி, "அவளை வருந்த விடுத்துப் பிரிந்து போவது பொருந்தாது!” எனக் கூறினாள். அது கேட்ட அவன், "தோழி! தோன்றின் புகழோடு தோன்றுக என்பர். அதுவே பிறவிப் பயனுமாம். அப்புகழ் வறியார்க்கு வழங்கி வாழும் வள்ளன்மையால் வரும். அவ் வள்ளன்மையை வாழ்விப்பது பொருள். ஆகவே, அப் பொருளீட்டிப் புகழ் தரும் பணி மேற்கொண்டேன்.” எனப் புகழின் சிறப்பையும், அப்புகழ் பெறப் பெருந்துணை புரியும் பொருளின் சிறப்பையும் எடுத்துக்கூறி, "அப்பொருள் பெறுவான் வேண்டிப் பிரிந்து செல்லத் துணிந்துள்ளேன். ஆதலின், அதுகாறும் அவள் பொறுத் திருப்பாளாக, அதுவே அவள் பெண்மைக்குப் பெருமையாம்!” எனக் கூறினன். அவன் கூறிய சொற்களால், பொருளின்பால் சென்ற பற்றுள்ளமே, அவனைத் தன் மனைவியை விடுத்துப் பிரியச் செய்தது என்பதை உணர்ந்து கெ. பண்ட தோழி, அப் பொருளின் நிலையா இயல்பினை எடுத்துக்காட்டின்,