பக்கம்:பாலைப்புறா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலைப்புறா

144

சூரியநாராயணனின் பாசப்பரிவாய் பக்கத்தில் உராய்ந்து வந்த கம்பெனிக்காரை பார்த்த மனோகர், ஒரு ஆட்டோவை கைதட்டிக் கூப்பிட்டான். கம்பெனி டிரைவருடைய பார்வை சரியில்லை... அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே, அது வந்துவிட்டது... மாதிரியான பயப்பார்வை. இந்த ஆட்டோ, அடுக்குமாடி கட்டிடத்தின் முன்னால் வந்து நின்றபோது, மனோகர் மீட்டரைப் பார்க்காமலே, டிரைவர் கையில் மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களைத் திணித்துவிட்டு, லிப்ட் பக்கம் வந்தான். அந்த லிப்டிற்குள் கும்பலோடு நின்ற குடியிருப்போர் சங்கத் தலைவர் நாராயணசாமி அவர்களுக்கு, ஒரு வணக்கம் போட்டான். லிப்டுக்குள் ஏறப் போனான். உடனே, நாராயணசாமி வெளியே குதித்தார். உள்ளே நின்றவர்களைப் பார்த்து, கண்களைக் குதிக்க விட்டு, அவர்களையும் குதிக்க வைத்தார்.

‘நீங்க மொதல்ல போங்க மனோகர், நாங்க பின்னாலயே வாறோம் எப்பா... முதல்ல அவரை விட்டுட்டு வா... போங்கோ மனோகர்’.

மனோகர், அவர்களை ஏற இறங்கப் பார்த்தான். மேற்கொண்டும் பார்க்க முடியாமல் பாம்பு போல் சுற்றி வளைந்த மாடிப்படிகளில் ஏறினான். நிதானமாய் நடப்பதற்குப் பதிலாக ஒடினான். துரையீரல் வாய்க்கு வரப் போவது போல் தோன்றினாலும், இருதயம் உள்ளுக்குள்ளேயே ஊழிநடனம் போட்டாலும், அவன் மூச்சடக்கி ஓடினான். ஆங்காங்கே நின்ற பெண்கள் ஒங்களுக்கு விஷயம் தெரியாதா என்பது மாதிரி அவனைப் பார்த்தார்கள். எட்ட நின்று பார்த்தார்கள்.

அவன், இரண்டாவது மாடிதளத்திற்கு வந்ததும், காமாட்சி பாட்டிதான் எச்சரிக்கையான இடைவெளியில் நின்றபடி கேட்டாள்.

"என் பேத்தி ஆம்புடையான். ஏர் போர்ட்டுக்கு வந்தாரப்பா?” 'நான் யாரையும் பார்க்கல மாமி.’ காமாட்சி அம்மாவுக்குக் கொண்டாட்டம்; ஒருவேளை, பேத்தியும், அவள் வீட்டுக்காரனும் இவனை விமானநிலையத்தில் சந்தித்து, வீட்டுக்குக் கூட்டிப் போய், பார்சலை பிரித்து... காக்கா கடியாய் கடித்து... இவனுக்கு வந்தது அதுகளுக்கும் வந்து... நல்ல வேளை இவன் போகல... அவங்க வர்ல ‘காமாட்சிதாயே நீ தெய்வம்டி’ என்பிள்ளைகளை இவனோட சேரவிடல. இதுக்காக இப்பவே வந்து உனக்கு ஒரு சேலை சாத்துறேன்... தாயே... பவர் கட்டு... படியில் இறங்க முடியாது. அப்புறமாவாறேன் தாயே.

பாட்டி, மனோகரின் முதுகை மகிழ்ச்சியோடு பார்த்தபோது, திருமதி எட்வர்ட் சாமுவேல்... சத்தம் போட்டே அவனைத் திட்டினாள். ‘இவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/144&oldid=1405151" இலிருந்து மீள்விக்கப்பட்டது