152 பாலைப்புறா
பயலுக்கு நான் பெத்த பொண்ணுதானாகிடைச்சாள்?”
தவசிமுத்து, எதுவும் பேசாமல் கால்களைத் தேய்த்தபடியே நின்றார். இந்த சுப்பையா சுருள் (வரதட்சணை) பாக்கி ஐயாயிரம் ரூபாய் கொடுக்கணும். அதுக்குள்ளே இந்த இழவும், எட்டும் வந்துட்டு. மெட்ராஸ்லே போய் அந்தப் பயலை பார்த்துட்டு வர முந்நூறு ரூபாய் வேற செலவாகும். அவனே வந்தால் செலவு மிச்சம்...
“எம்மா... கலைவாணி... இதையாவது சொல்லு. அந்தப் பயல்... அதுதான் ஒன் புருஷன்... இங்கே எப்போ வருவானாம்... நீ அவனையும் கூட்டிக்கிட்டு வந்து இருக்கலாம் இல்லே".
கட்டிலில் செத்த சவம் போல் கிடந்த சுப்பையாவால், தாள முடியவில்லை. சம்பந்தியிடம் நெருங்கி வந்து கோபம் கோபமாய்ப் பேசினார். அந்த சமயம் பார்த்து, தவசிமுத்து மடியில் துருத்திய வெற்றிலை பாக்கை எடுத்தார்.
‘வே,... ஒமக்கு சமய சந்தர்ப்பம் தெரிய வேண்டாமா.., ஒம்ம மகன் வரக் கூடாத நோயை வாங்கி... என் மகளுக்கும் கொடுத்துட்டான். நாங்க மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாம தவிக்கோம். நீரு என்னடான்னா’
“அப்போ என்மவனை பொம்புளக் கள்ளன்னா சொல்றீரு?”
"அதைத்தான் பேப்பர்லேயே போட்டுட்டானே. மொதல்ல, நீரு போம் வே. கோபம்... பழி பாவம், வேண்டாம். வெத்திலை பாக்கு போடுற நேரமா இது”.
தவசிமுத்து, வன்மமாகத் தலையாட்டிவிட்டு, அவசர அவசரமாக வெளியேறினார். இதற்குள் சீனியம்மா மகளின் வயிற்றை தடவியபடியே, மருமகளிடம் பேசினாள்.
‘ஒன் நாத்தனாருக்கு வயிறு கொலுக்கா இருக்கும்மா... மொதல்ல மோரு கொண்டு வாம்மா. அதாவது வயித்துக்குள்ளே இறங்குதான்னு பார்ப்போம்’
குழல்வாய் மொழி, சமையலறைக்குள் போய், ஒரு பெரிய பித்தளை டம்ளர் நிறைய மோர் கொண்டு வந்தாள். அந்த டம்ளர் விளிம்பை, கலைவாணியின் வாய் விளிம்பில் வைத்தாள். அப்போது வீட்டுக்கு வெளியே பலத்த கூச்சல், ம்னோகரின் அம்மா சீதாலட்சுமியின் ஒங்காரக் கூச்சல். கலைவாணியை விட்டு விட்டு, எல்லோரும் வெளியே வந்தார்கள்.
மனோகரைப் பெற்ற சீதாலட்சுமி, கணவன் தவசிமுத்தோடும், மச்சான்