சு. சமுத்திரம் 185
எய்ட்ஸ் வந்ததோ... வரப்போகுதோ... என்னால்... செய்யுறதுக்கு எதுவுமே இல்லை.”
இந்த மனித சஞ்சாரத்தில், தான், அவ்வளவாய் முக்கியமில்லை என்பதை சந்திரா கசப்பு மாத்திரையாய் விழுங்கினாள். எப்படியோ எல்லா நோயாளிகளையும் ஒரு வழியாய் அனுப்பிவிட்டு, அசோகனை வீட்டில் வரவேற்பதற்காக, அவள் புறப்பட்டபோது...
கலைவாணி உள்ளே வந்தாள்; விரிந்த குழல்; கலைந்த உடை... சிவப்பேறிய கண்கள்... வெறுமையான பார்வை...
டாக்டர் சந்திரா, பயந்துவிட்டாள். இவள், சென்னையில் போட்ட போட்டுக்கே, இன்னமும் பிராக்ஸ்-வான் மாத்திரைகளை விழுங்கி வருகிறாள். இப்போ என்ன செய்யப் போறாளோ...
‘உட்காரும்மா...’
'நான் உட்காரவர்ல... படுக்க வந்தேன்’
“மொதல்ல உட்காரும்மா..."
‘எனக்கு மூணுமாசம், அபார்சன் செய்யணும்.’
‘கண்டிப்பாய் செய்யுறேன்...கலைவாணி... இது... மேன்படுத்தப்பட்ட சுகாதார நிலையந்தானே... அதுக்கு இங்கேயே வசதி இருக்குது... உட்காரும்மா...’
ஒருவாரம் இருக்கவும் படுக்கவும் இடம் கிடைத்த ஆறுதலில், கலைவாணி, சந்திராவைப் பார்த்தாள். லேசான புன்னகை... அவஸ்தைப்படும் நோயாளியிடம் சீக்கிரமாய் செத்துடுவே என்றால் எப்படி ஒரு புன்னகை வருமோ, அப்படி...
டாக்டர் சந்திரா, கலைவாணியின் தோளைத் தொட்டு, ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள். இன்னும் பயம் போகவில்லை. கலைவாணியின் பார்வை அப்படி, மன உறுத்தலும் குறையவில்லை.
‘இந்தா பாரும்மா... நான் வேணுமுன்னு அப்படி மறைக்கல. ஒன் புருஷனோட மச்சானாமே... மோகன்ராம்... அவன் மனோகரோட வந்து மிரட்டுன மிரட்டலுல பயந்திட்டேன். ராத்திரியோட ராத்திரியாய் தூக்கிட்டுப் போகப் போறதாய் வேற எச்சரித்தார். தனக்குப் போகத்தான் தானமோ... இல்லியோ, தன் உயிருக்குப் பிறகுதானம்மா, பிறத்தியார் உயிரு... சரி... ஒரு வாரம் ஒன்றாவே இருக்கப் போறோம். விபரமா சொல்றேன்... அதுக்குப்