பக்கம்:பாலைப்புறா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 பாலைப்புறா

வாடாப்பூவும், தேனம்மாவும், கலைவாணி ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லாமல், அந்த சின்னத் திரையை வாயகல பார்த்தபோது, ஆனந்தி எழுந்தாள். தொலைக்காட்சி பெட்டியில் குமிழை இடதுபக்கமாய்த் திருப்பினாள். உடனே அது, மீண்டும் கண்ணாடிபோல் ஆனது. பேச்சில் இனித் தடங்கல் இருக்காது என்ற திருப்தியோடு, அவள் கீழே உட்கார்ந்த போது, வாடாப்பூ, செல்லமாகவும், குத்தலாகவும் கேட்டாள்.

‘ஒங்க வீட்டை மாதிரி - காசு கொடுத்துட்டுப்பார்க்கணும் எங்கிறியா?”

‘நீ... குழுக் கூட்டத்துக்கு வந்தியா... இல்ல அந்தச் சாக்கிலே இதைப் பார்க்க வந்தியா.... நாம் பேசறதை அது கேட்க விடுதா...’

‘நீ பேசிட்டாலும்... எப்பாடி!’

கலைவாணி, இருவரையும், இரு கரங்களால் சமாதானப்படுத்தி விட்டு, எழுந்தாள். அந்தப் பெட்டிப் பக்கம் போனாள். அப்போது பிரதமர் வி.பி. சிங் சென்னை விமானநிலையத்தில், விடாக் கண்டர்களான அரசியல்வாதிகளின் அமர்க்களப் பின்னணியில், ஏ.கே. 47 பிடித்த காவலர்களின் முன்னிலையில், விமானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பார்த்து, கலைவாணி கீழே ஒன்றை அழுத்தினாள். விமானநிலையத்தில் கைகளைத் தூக்கி ‘வாழ்க போட்டவர்கள், கடைசி நிமிட முயற்சியாய், சால்வையோடு நின்றவர்கள் உட்பட அத்தனை பேரையும் பார்க்க முடிந்தது. கேட்க முடியவில்லை. அத்தனை பேரும் ஊமை ஆனார்கள். ஒரே அழுத்தில் ஊமையாக்கப்பட்டார்கள்.

கலைவாணி, சிரித்தபடியே கீழே உட்கார்ந்தாள். எல்லோருக்கும் திருப்தி. ஆனால் வாடாப்பூவுக்கு பாதிதான்.

‘சீக்கிரமாய் பைசல் பண்ணிடுவோம்... ஒலியும் ஒளியும் வரப் போற நேரம். பாட்டு இல்லாமல் ஆடுறதைப் பார்த்தால், அசிங்கமாய் இருக்கும்’

இப்போது கலைவாணியே சீறினாள். ஒரு அடுக்கில் இருந்த ஒரு செவ்வகக் காகிதத்தை எடுத்துக் கொண்டே, வாடாப்பூவின் முகம் பார்க்காமலே பேசினாள்.

‘ஒனக்கு கால நேரமே தெரியாதாக்கா? இந்த முக்கியமான சங்கதிக்கு கெடு போட்டால், அப்புறம் அந்த சங்கதிதான் கெட்டுப் போகும். சரி... சரி... ஆனந்தி! இந்த நோட்டிசைப் படிச்சுப்பாரு. எழுத்துப் பிழை இலக்கணப் பிழை... இருந்தாக் கூட பரவாயில்லை.... முன்னிலை வைக்கிறவங்க பெயர்ல பிழை வந்துடப்படாது. உலகமே கெட்டுப் போயிட்டதாய் கூச்சல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/20&oldid=1404943" இலிருந்து மீள்விக்கப்பட்டது