சு.சமுத்திரம் 205
சந்திராவையும் ஏறிட்டுப் பார்த்து, ஈரப் புன்னகையை வீசினாள். அவர்களை எதிர்பார்ப்போடு பார்த்தாள். ஆனாலும் கேட்கப் பயம். அவர்கள் நெகட்டிவ்வாய் பேசி, பாசிட்டிவ்வாய் ஆக்கிவிடப்படாதே என்ற பயம்... ஆனாலும் திடீரென்று மனம் துள்ளியது. அது இருந்தால், டாக்டரய்யா தன்னை பாராட்டி இருக்க மாட்டாரே...சமாய்ச்சுட்டேன்னு சொல்ல மாட்டாரே...
அசோகன், டாக்டராய் பேசினான்.
‘ஒனக்கு அபார்ஷன். வெற்றிகரமாய் முடிஞ்சுட்டு... எந்த சதையோ, துண்டு துக்கடாவோ.. உள்ளே மாட்டிக்கல. நல்லாவே செக்கப் செய்திட்டோம்’
டாக்டர்சந்திராபெருமிதமாய்ப் பேசினாள்.
‘எதையும் பிடிப்போடும், துல்லியமாகவும், துட்டுமேல் கண் வைக்காமலும் செய்யுறதுதான், இவரோட டிரேட்மார்க்... நாம் இருவரும்... இவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கோம்.’
‘அய்யய்யோ... கொக்குத் தலையில கட்டவுட்டா... வாணாம்மா உலகத்திலேயே பெரிய பளு. இந்த நன்றிப் பளுன்னு ஆஸ்கார் ஒய்ட் சொல்லி இருக்கார்...”
கலைவாணிக்கு, அசோகன் சொல்வது எதுவுமே காதில் விழவில்லை. இன்னும் ஏன் அவர் சேதி சொல்லவில்லை? ஒரு வேளை இன்னும் டெஸ்ட் முடிவு தெரியலியா...தெரிந்து. அந்த இன்ப அதிர்ச்சியைதன்னால் தாங்கிக் கொள்ளமுடியாது என்று நினைக்காரா...அல்லது ஒரு வேளை...
கட்டில் விளிம்பில் தொங்கிய அட்டைக் காகிதத்தை தூக்கிப் பிடித்துப் பார்த்துவிட்டு திரும்பிய அசோகனிடம், கலைவாணி தற்செயலாய் கேட்க வேண்டும் என்று நினைத்து, அவசர அவசரமாகக் கேட்டாள்.
‘அப்புறம்... டாக்டர்... அந்த அய்ம்பதுக்கு அய்ம்பது...’
கலைவாணி கேட்ட வாயை மூடிக் கொள்ளாமலே, அசோகனை அண்ணாந்து பார்த்தாள். இதயவேகமும், மூச்சு வேகமும் அதிகரித்தன. உச்சி சுட்டது. பாதம் குளிர்ந்தது.
அசோகன், அவள் கேட்டதை கேட்காதது போல் பேசினான்.
‘நல்லவங்களுக்குத் தான். கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வருது. இந்த டாக்டரம்மாவை என்ன பாடுபடுத்துறாங்க என்கிறே... ஒனக்காக அங்கே சண்டை போட்டதற்காக இந்த சந்திராவுக்கு மெமோ கொடுத்திருக்காங்க...