234 பாலைப்புறா
அந்த மூவரும், கூடத்தில் இருந்து சமையல் கட்டுக்கு அப்பால் உள்ள அறைக்குள் போகப் போனபோது, கலைவாணி பின் பக்கத்துக் கதவை மூடிவிட்டு, அவர்கள் கண்ணில் பட்டாள். சங்கரனைப் பார்த்து, தன்னையறியாமலே பின் வாங்கினாள். பிறகு, நின்ற இடத்திலேயே நின்றாள்... சங்கரனும், அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தான். தீவிரமாகப் பார்த்தான். பிறகு சந்திராவைப் பார்த்து, கலைவாணியை மோவாயால் சுட்டிக் காட்டி'இவள். இவள் என்று இழுத்தான். ஆள்காட்டிப் பெருவிரலையும் பார்த்துக் கொண்டான். சந்திரா...திட்டவட்டமாகவே பேசினாள்...
‘அதே கலைவாணிதான். என்னால சீரழிஞ்சு போனவள்...” சங்கர், அத்தையைப் பார்த்தான். ‘பார்த்தீங்களா அத்தே ஒங்க மகளை என்று சொல்லாமல் சொல்வது போல் பார்த்தான். கலைவாணியை முறைத்தான். பெருவிரலை, இன்னொரு கையால் பிடித்தான். கோபங் கோபமாய்க் கேட்டான்.
‘ஒரு எய்ட்ஸ் நோயாளியை எப்படி நீவீட்டுக்குள்ளே சேர்க்கலாம்?”
‘ஏன் சேர்க்கப்படாது...?”
‘முதல்ல...ஒனக்கு ஆபத்து... அப்புறம் ஒங்கம்மாவுக்கு ஆபத்து... அதோட எனக்கும் ஆபத்து...’
‘ஒரு டாக்டருக்கே நீங்க சொல்லிக் கொடுக்கீங்களா...”
‘எவளால நான் பாதிக்கப்பட்டனோ, அவளை நீ வீட்டுக்குள்ளே சேர்த்திருப்பது, என்னை இன்சல்ட் செய்யுறது மாதிரி’
‘சரி... அப்படியே வச்சிக்கங்க.. அப்புறம்?”
‘எய்ட்ஸ். நோயாளி கலைவாணியா... இல்ல நானா. ரெண்டு பேர்லே ஒருத்தரை நீதான் தீர்மானிக்கணும்’
‘மனதுல இருக்கிற எய்ட்சை விட ஒடம்பிலே இருக்கிற எய்ட்ஸ் எவ்வளவோ தேவல’
‘அப்போ’
‘அப்போதான்’
சந்திராவும் சங்கரனும், ஒருவரை ஒருவர் புதிதாய்ப் பார்ப்பது போல், பார்த்தார்கள். ஒவ்வொருவர்க்குள் இருக்கிற இன்னொருத்தரை, புதிதாய்க் கண்டுபிடித்ததுபோல், பகைப் பார்வையாய்ப் பார்த்துக் கொண்டார்கள். கலைவாணி நின்ற இடத்திலே நின்று, குன்றி போய் நின்றாள். அத்துவானக் காட்டில் கார் வெளிச்சத்தாலோ அல்லது பேட்டரி லைட்டாலோ கண்கூசி