346 பாலைப்புறா
கலைவாணி, அவளை நோக்கி நேருக்குநேராய் பார்க்க வேண்டியதாயிற்று. ‘நான் பாவி... தராதரம் தெரியாத பாவி’ என்று சீதாலட்சுமி அவளை ஏறிட்டுப் பார்த்து புலம்பினாள். அதைப் புரிந்து கொண்டதுபோல், கலைவாணி, அவள் கையைப் பிடித்தாள். அவ்வளவுதான். சீதாலட்சுமி கலைவாணியை ஆரத்தழுவினாள். இடைவெளி இல்லாத தழுவல்... இனிமேல் விடப் போவதில்லை என்பது போன்று பிடிப்பு... சுடுகாடே கத்துவது போன்ற கதறல்.
டாக்டர் அசோகன் உள்ளே போட்ட சத்தம், சீதாலட்சுமி போட்ட சத்தத்தை அடக்கியது.
‘நல்லா துடைம்மா. கையுறையை டைட்டாப் போட்டுக்கோசந்திரா... புண் இருக்கிற இடத்தை விட்டுட்டு, இல்லாத இடத்தில ஏன் பேண்டேஜ் போடுறே...? பாலா... ஸ்க்ரீனை எடுத்து வாசல் பக்கம் வை...’
அந்தக் குடிசையின் வாசலில், இரண்டு சட்டங்களாய் மடித்து வைக்கப்பட்ட திரைத்துணி, அகலப்படுத்தப்பட்டு, அங்கேயே வைக்கப்பட்டது. பச்சை சேலைக்காரியும், வார்ட் வாலிபனும், வெளியே வந்து ஆம்புலன்ஸ் வண்டிப் பக்கமாய் ஒடுவதும், அதற்குள் ஏறி, எது எதையோ எடுத்துக் கொண்டு உள்ளேபாய்வதுமாக இருந்தார்கள்.
எல்லோருக்குமே திருப்தி... இப்படி பாடாய் படுகிறவர்களைப் பார்த்ததும் கூட்டம் நெருங்கி வந்தது. சிலர், எதாவது ஒத்தாசை செய்யலாமா என்பது போல் உள்ளே பார்த்தார்கள். தவசிமுத்துதான், தாள முடியாமல் தவித்தார். கலைவாணி, இந்த ஆட்களை கூட்டிக்கிட்டு வந்து, மனோகரை எடுத்துட்டு போறதாய் இருந்தால், அதுல எதாவது சூட்சுமம் இல்லாமலா இருக்கும்...? சொத்துக்கு வில்லங்கம் வந்துடப்படாதே...
தவசிமுத்து எழுந்து, தலையில் துண்டை போட்டுக் கொண்டே அழுதார்...
‘என் பிள்ளைய... யாரும் எடுத்துட்டுப் போவப்படாது. அவன் இங்கயே, என் கண் முன்னாலயே கிடக்கட்டும்...”
எஸ்தர் அதட்டினாள்...
‘யோவ். பெரிசு. மனோவ ஒன் பிள்ளன்னு சொல்ல, உனக்கு என்னய்யா யோக்யதை இருக்குது... ? உன் கிட்ட எவ்வளவு கெஞ்சி இருப்பேன். வீட்டுக்குள்ளே சேர்த்தியா...? இப்போ இந்த குடிசையிலே... மனோவ வச்சதுக்கு, வாடகை தருவேன். வாங்கிக்கோ... குடிசையாவது,