பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

திருக்குறள்

தமிழ் மரபுரை


கடவுளாம். முதற்கண் சிறுதெய்வ வணக்கமாகவிருந்து பின்பு பெருந்தேவ வழிபாடாக வுயர்ந்த சேயியமும் மாலியமும் இறுதியில் முறையே சிவனியம் திருமாலியம் என்னும் வீடுபேற்று மதங்களாக வளர்ந்துவிட்டன. ஆயின், கடவுள் மதத்தார் கடவுள் என்னுஞ் சொற்கேற்ப அவ் விரண்டிற்கும் பொதுவா யிருக்க வேண்டியதாயிற்று.

"அங்கிங் கெனாதபடி யெங்கும்பிர காசமாய்", "பண்ணே னுனக்கான பூசை" என்னும் தாயுமானவர் பாட்டுகளும், "உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும்". "சொல்லிலும் சொல்லின் முடிவிலும்", "எட்டுத் திசையும் பதினாறு கோணமும்" என்னும் பட்டினத்தார் பாட்டுகளும் "நட்டகல்லைத் தெய்வ மென்று" என்னும் சிவ வாக்கியப் பாடலும் கடவுளியல்பைத் தெளிவாகக் காட்டும்.

சிவனியமும் திருமாலியமும் முறையே சிவன் என்னும் பெயராலும் திருமால் என்னும் பெயராலும் கடவுளையே வணங்கும் வீடுபேற்று மதங்களாம். ஆதலால் கிறித்தவமும் இசலாமும் போலக் கொள்கையால் வேறுபடினும் தெய்வத்தால் ஒன்றாம். எனினும், உருவ வணக்கங் கொள்வதால் வீடுபேற்று மதங்களேயன்றிக் கடவுள் மதமாகா.

கடவுட்கொள்கையும் கோயில் அல்லது உருவவழிபாடு மில்லாத ஆரியர் சிவனியம், திருமாலியம் என்னும் இரு தமிழ மதங்களையும் ஆரியப்படுத்தற்கும், தம்மினு முயர்ந்த தமிழரை அடிமைப்படுத்தற்கும் கடவுள் முத்தொழிலோன் என்னுங் கொள்கையைப் பயன்படுத்திக் கொண்டு, பிரமன் என்னும் ஒரு தெய்வத்தைப் புதிதாகப் படைத்து, அப்பிரமன் படைப்போனென்றும் திருமால் காப்போனென்றும் சிவன் அழிப் போனென்றும் முத்திருமேனிக் கொள்கையைத் தோற்றுவித்துவிட்டனர்.

சிவனையும் திருமாலையும் சிவனியரும் திருமாலியரும் முத்தொழில் இறைவனென்றே கொள்வதாலும், முத்திருமேனியர்க்கு முதல்வனொரு வன் வேண்டியிருப்பதினாலும், தமிழ் அறிஞரும் கடவுள் மதத்தாரும் முத்திருமேனிக் கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை.

கடவுள். மதமாவது, காலமும் இடமும்போல முதலும் முடிவும் உருவமும் நிறமுமின்றி, இயல்பாகவே எங்கும் நிறைந்தவனாகவும். எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும், எல்லாம் உடைய வனாகவும், முற்றின்பனாகவும். முழுத் தூயனாகவும். எல்லையில்லா அருளனாகவும், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்தழிப்பவனாகவு-