பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - முதற்பகவன் வழுத்து

43


ஒருவனேயாதலின், அவனை யடைந்தார்க்கல்லது துன்பமுங் கவலையும் நீங்காவென்பதாம்.

அருமைச் சொல்லிற்குரிய சின்மை இன்மையென்னும் இரு பொருள்களுள், இங்கு வந்துள்ளது இன்மை.

8. அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது.

(இ-ரை.) அறஆழி யந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.

எல்லா அறங்களுந் தொக்க தொகுதி கடல்போற் பரந்ததாதலின், இறைவனை அறவாழியென்றார். பொருளின்பங்களைக் கடலாக வுருவகித் தமையால், அவற்றொடு தொடர்புள்ள அறவாழி என்பது அறக்கடலையன்றிப் புத்தனது தரும சக்கரத்தை யுணர்த்தாது. பிறவாழி கடவாமையாவது பொருளின்ப ஆசையுள் மூழ்கித் துன்புறுதல். இறைவனடி சேர்ந்தவர் அத்துன்பத்தினின்று நீங்கி என்றென்றும் பேரின்பத்தில் திளைப்பர் என்பதாம்.

அறம்பொரு ளின்பத்தை ஆழியென் றுருவகித்து இறைவன் திருவடியைப் புணையென் றுருவகியாது விட்டது, ஒருமருங் குருவகம்.

9. கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.

(இ-ரை.) எண் குணத்தான் - எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை - திருவடிகளை வணங்காத தலைகள்; கோளில் பொறியின் - தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம்இல - பயன்படாதனவாம்.

எண் குணங்களாவன: தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு. கட்டின்மை, பேரருள். எல்லாம் வன்மை, வரம்பிலின்பம் என்பன. தாளை வணங்காத் தலையென்று தலையையே விதந்தோதினாரெனினும், வழுத்தா நாவும், புகழ்கேளாச் செவியும் அங்ஙனமே பயனில்லாதன வென்று கொள்க. குணமிலவே என்னும் பன்மை வினைகொண்டு முடிதலால், தலை என்பது பன்மை குறித்துவந்த பால்பகா வஃறிணைப் பெயர். இறைவனுக்கு