பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

114

திருக்குறள்

தமிழ் மரபுரை



வாக அறிதற்கு ஒற்றரை ஆளுதல். ஒற்றராவார், அவ்வக் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுகோலம் பூண்டு பகையரசர் உவளகமும் புகுந்து, பிறர் ஐயுறாவாறு அங்குள்ள அருமறைகளையும் மருமங்களையும் திறமையாக. அறிந்து, ஐயுற்றும் அறிந்தும் பகைவராற் கைப்பற்றப்பட்டு உயிர்க்கிறுதி நேரினும் வாய் சோர்ந்து உண்மை வெளியிடாதவராய், செய்திகளை யெல்லாம் உடனுடன் அரசனுக்கு மறைவாக வந்து உரைக்கும் மாபெருந்திறவோரும் மறவோரும் ஆவர். ஒற்று, வேய் என்பன ஒருபொருட் சொற்கள்; 39ஆம் அதிகாரம் முதல் இதுவரை கூறப்பட்டுள்ள இலக்கணங்களை யெல்லாங் கொண்ட அரசன், தன் நாடு காவற்கும் வேற்று நாடு கைப்பற்றற்கும். ஒற்றாடல் இன்றியமையாததாதலின் இது அவற்றின் பின் வைக்கப்பட்டது.

581. ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந் தெற்றென்க மன்னவன் கண்.

(இ-ரை.) ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் ஆகிய இவ் விரண்டையும்; மன்னவன் கண் தெற்று என்க - அரசன் தன் இரு கண்களாகத் தெளிக.

ஒற்றுத் தன் கண் செல்லாத இடமெல்லாஞ் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை அறிவித்தலானும், நூல் தன் அறிவிற்கெட்டாத வினைகளையுஞ் சூழ்ச்சிகளையுந் தெரிவித்தலானும், இவ் விரண்டையும் அரசன் முறையே தன் புறக்கண்ணாகவும் அகக்கண்ணாகவும் கொண்டு ஒழுகுக என்றார். அரசனை அரசு என்பதுபோல் ஒற்றனை ஒற்று என்றார். தெற்றெனல் தெளிதல் அல்லது தெளிவாதல்.

582. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.

(இ-ரை.) எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல் அறிதல் - எல்லாரிடத்தும் நிகழ்பவை யெல்லாவற்றையும் எப்போதும் ஒற்றால் விரைந்து அறிதல்; வேந்தன் தொழில் - அரசன் கடமையாம்.

‘எல்லார்க்கும்' என்றது முத்திறத்தாரையும். இது நான்காம் வேற்றுமை ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். 'எல்லாம்' என்றது சொல் செயல் பொருள் மூன்றையும் குறிக்கும். இடையறாது நிகழ்தலால் 'எஞ்ஞான்றும்' என்றும், உடனுடன் நட்போ பகையோ பூணவும் கொடையோ தண்டமோ நிகழ்த்தவும் விரைந்து செய்திகளை யறிய