பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

9



கல்விக் கேற்பச் செவ்வையாய்த் தொழில் செய்தலும் ஆம். இவ் விருவகை நடத்தையிலும் நிலைத்து நிற்கவேண்டு மென்றற்கு நிற்க' என்றார்.

'கற்பவை' என்பது. ஒருவர் தம் உளப்பான்மைக்கும் உடல்நிலைமைக்கும் அகக்கரண வியல்பிற்கும் ஏற்றவாறு ஒரு தொழிலைத் தெரிந்து கொண்டு, அதற்குரியவற்றைக் கற்கவேண்டு மென்பதைக் குறிப்பாயுணர்த்தும்.

392. எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு.

(இ-ரை) எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - மாந்தர் பொதுவாக இலக்கமென்று சொல்லுவதும் மற்ற எழுத்தென்று சொல்லுவதுமான இருவகை நூற்கலைகளையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப - இவ் வுலகிற் சிறப்பாக வாழவிரும்பும் மக்களுயிர்க்குக் கண்ணென்று சொல்லுவர் அறிந்தோர்.

அறம் முதலிய நாற்பொருளாயமையும் எல்லாக் கலைகளும் அறிவியல்களும், எண்ணூலும் இலக்கியமும் என இருவகுப்பாக வகுக்கப்பெறும். எண்ணூலென்பது கணக்கும் (Arithmetic) கணிதமும் (Mathematics). அது சிறப்பாக எண்களால் அறியப்பெறும். இலக்கிய மென்பது மற்றெல்லா அறிவுத்துறைகளும் ஆம், அது பெரும்பாலும் எழுத்தை உறுப்பாகக் கொண்ட சொற்களால் அறியப்பெறும். இவ் விருவகை நூல்வகுப்புகளும், எல்லாப் பொருள்களையும் அறிதற்குக் கண்போல் அல்லது கண்ணாடி போல் உதவுதலாற் கண்ணெனப்பட்டன. இவை எழுதப்பட்ட வடிவிற் கட்புலன் வாயிலாகவும் எழுதப்படா வடிவிற் செவிப்புலன் வாயிலாகவும் அறியப்படும். கட்புலவடிவில் இலக்கம் (Numerical figure) என்னும் வரிவடிவு எண்ணூலையும், எழுத்து (Character) என்னும் வரிவடிவு இலக் கியத்தையும், வேறுபடுத்திக் காட்டும்.

நூல்வாயிலாகப் பொருள்களை உண்மையாகக் கண்டறிவது அகக் கண்ணேயாயினும், அதற்குக் கண்ணாடிபோல் உதவுங் கருவித் தன்மை நோக்கி இருவகை நூல்களும் கண்ணெனச் சார்த்திக் கூறப்பட்டன. இதை, குருடர்க்கும் முதியோர்க்கும் கண்ணுங் காலும்போல் உதவுங் கோலைக் கண்ணாகவுங் காலாகவும் கூறியதுபோற் கொள்க. "கோற்கண்ண ளாகுங் குனிந்து" என்பது நாலடியார் (17). "முக்காலுக் கேகாமுன்" என்றார் காளமேகனார்.